ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் நோபல் பரிசைப் பெற்றது

2020ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு நேற்று (10) வழங்கப்பட்டது.

ஆண்டு தோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

1963ஆம் ஆண்டு ஐ.நா.வால் உருவாக்கப்பட்ட மனிதநேயச் சேவைகளை செய்யும் உலக உணவுத் திட்டத்திற்கு 2020ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கடந்த ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நோபல் குழு சார்பாக இணையவழியில் நடக்கும் நிகழ்வில் ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பட்டினியை எதிர்த்துப் போராடியது. போர், உள்நாட்டுப் போர் நடக்கும் இடங்களில் அமைதியான சூழல் நிலவ அளித்த பங்களிப்பு, பிரச்சினைக்குரிய இடங்களில் பட்டினியை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க 58 ஆண்டுகள் அயராத முயற்சிகள் மேற்கொண்டதால் ஐ.நா.வின் உலக உணவுத் திட்டடத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

உலக உணவுத் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் பட்டினியால் வாடிய 88 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி மக்களுக்கு உணவு வழங்கி பசியாற்றி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது. உலக அளவில் பட்டினியை ஒழிப்பது என்பது ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்காக கடந்த 2015ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக ஏமன், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, நைஜீரியா, தெற்கு சூடான், புர்கினபாசோ ஆகிய நாடுகளில் பசியோடு உள்நாட்டுப் போர் வன்முறையும் சேர்ந்து கொண்டது. இந்தக் காலகட்டத்தில் கொரோனாவாலும் மக்கள் பாதிக்கப்பட்டதால், ஏராளமான மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் உலக உணவுத் திட்டம் தன்னுடைய முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, பட்டினியைப் போக்க முயன்று வருகிறது.

கொரோனா காரணமாக ஆண்டு தோறும் ஆடம்பரமாக நடக்கும் நோபல் பரிசளிப்பு விழா இந்த ஆண்டு எளிமையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.