ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியின் கீழ் சமூக – பொருளாதார மீட்சி செயற்திட்டம்

ஐரோப்பிய ஒன்றியம் அதன் அமுலாக்கப்பங்காளியான ‘வேல்ட் விஷன்’ உடன் இணைந்து பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் சமூக – பொருளாதாரக்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் 18 மாதகாலத்துக்கான 2 மில்லியன் யூரோ நிதியுதவியின்கீழ் ‘கிரேஸ்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘கீழ்மட்ட மோதல் தடுப்பு’ செயற்திட்டம் வத்தளை பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக கற்பிட்டி, நவகத்தேகம, முந்தல் மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளிலும் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினால் சமூக – பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய விரிவான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ‘கிரேஸ்’ செயற்திட்டத்தின் ஊடாக சுமார் 130,000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செயற்திட்டத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் டெனிஸ் சைபி, ‘இலங்கை பாரிய நெருக்கடிக்கு மத்தியில் இருப்பதுடன், இது இலங்கையர்கள் பலரை மிகமோசமாகப் பாதித்துள்ளது. எனவே வெகுவாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரை அடையாளங்காணும் நோக்கிலேயே நாம் ‘வேல்ட் விஷன்’ அமைப்புடன் இணைந்து பணியாற்றிவருகின்றோம். அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரில் பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் தொடர்பில் நாம் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.