ஐநா மனிதவுரிமை பேரவையின் 46/1 தீர்மானம் இயற்கை நீதிக்கு முரணானது – கஜேந்திரகுமார்

இனப்படுகொலை புரிந்த சிறிலங்கா அரசையே , தன்னைத்தானே விசாரிக்க கோரும் ஐநா மனிதவுரிமை பேரவையின் 46/1 தீர்மானம் இயற்கை நீதிக்கு முரணானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது என சிறீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த அரசினால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலை உட்பட அனைத்து குற்றங்களையும் முழுமையாக பக்கச்சார்பற்ற முறையில் விசாரிக்கக்கூடிய ஒரு சர்வதேச பொறிமுறையையே பாதிக்கப்பட்ட மக்களாகிய தமிழர்கள் கேட்டுநிற்கும்போது,

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரையில் ,

இனப்படுகொலை உட்பட பல்வேறு குற்றங்களை இழைத்த , குற்றங்களின் பங்காளியாக இந்த அரசையே தனது குற்றங்களை விசாரிக்க கோரும் ஐநா மனிதவுரிமை பேரவையின் 46/1 தீர்மானம் மிகவும் ஏமாற்றகரமானது. இயற்கை நீதிக்கு முரணானது. உண்மையில் இது சிறிலங்கா அரசை காப்பாற்றி இருக்கிறது.

2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் “ வெளிநாட்டு வழக்குதொடுநர்கள், வெளிநாட்டு நீதிபதிகளை” இணைத்து ஒரு கலப்பு பொறிமுறையை உருவாக்குதல் குறித்து பெயரளவிலேனும் கதைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த 2021 இன் 46 தீர்மானத்தின் செய்ற்பாட்டுப் பந்தி 6 இன் பிரகாரம் , குற்றத்தின் பங்காளிகளான இந்த அரசையே , தான் இழைத்த குற்றங்களை விசாரிக்க கோரி இருக்கும் இயற்கை நீதிக்கு முரணான தன்மை இருக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களாகிய தமிழர்களை பொறுத்தவரையில் , நீதீக்கான பொறுப்புக்கூறலை பொறுத்தவரையில் இந்த தீர்மானம் மிகவும் பலவீனமானது , வலுவற்றது என கருதுகிறோம் . குற்றவாளிகளான சிறிலங்கா அரசை மீண்டும் பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இது அமையப்போகிறது என அஞ்சுகிறோம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, குற்றங்களை இழைத்த சிறிலங்காவே சிறிலங்காவே விசாரிக்க வேண்டும் என கோருகின்ற இந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த சக பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் “ நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டார் “ என பராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிடுகின்றார்கள்.

நான் அவருடைய ஒரு ஆதரவாளன் அல்லன்.

ஆனால் அவர் உண்மையில் சிறிலங்காவை காப்பாற்றியே கொடுத்துள்ளார்.

அந்தவகையில் அவர் , சிறிலங்காவுக்கு அல்ல , தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கே துரோகம் இழைத்துள்ளார்.

உண்மையில் இந்த ஐநா தீர்மானங்கள் தமிழ் மக்களுக்கு நீதி கோரும் நோக்கில் நிறைவேற்றப்படுவது போல தென்படவில்லை.

முற்றிலும் சீனாவை நோக்கி சார்ந்திருக்கும் இந்த அரசுக்கு , தத்தமது புவிசார் அரசியல் நலன்களை காப்பாற்றிக்கொள்ள மேற்கு கொடுக்கின்ற ஒரு அழுத்தமாகவே இதை நாம் பார்க்கின்றோம். அதற்கு அவர்கள் தமிழர்களை ஒரு கருவியாக மட்டுமே பாவித்து இருக்கிறார்கள்.

துரதிர்ஷ்ட்வசமாக மேற்குக்கும் சீனாவுக்குமான இந்த புவிசார் அரசியல் போட்டியில் தமிழர்களை பகடைகளாக பாவிக்கப்ப்டுகிறார்கள்.