ஏழு நாடுகளில் தீவிரமாகும் கொரோனா

உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா 10 நாடுகளில் தீவிரமாக இருந்தது. தற்போது கடந்த வாரத்தில் 7 நாடுகளில் மீண்டும் தீவிரமாக அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த வாரம் தினசரி ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதேபோல பிரேசில், இத்தாலி, போலந்து, ஸ்பெயின், ரஷ்யா, ஜேர்மனி ஆகிய ஏழு நாடுகளில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் விபரப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மூன்று நாடுகளான இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் மட்டும் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருகின்றது.

அமெரிக்காவில் தினசரி 1 இலட்சம் முதல் 1.45 இலட்சம் வரையாக உள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் பின்னர் அங்கு கொரோனா பரவல் அதிகரித்திருப்பதையும் காண முடிகின்றது.

கடந்த புதன்கிழமையன்று அமெரிக்காவில் மட்டும் கொரோனா தாக்கத்திற்குள்ளாகி 1,479 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 1,134 ஆக உள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைந்தாலும், அது அனைத்து மாநிலங்களிலும் ஒன்று போல் காணப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 44,879 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 547பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பிற்குள்ளானோர் 87.28 இலட்சமாக உள்ளது.

இதேபோல பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கும் பிரேசிலில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பிற்குள்ளானோர் 57,47,660 ஆகவும், பலி எண்ணிக்கை 1,63,368 ஆகவும் உள்ளது.

இதேபோல இத்தாலி, போலந்து, ஸ்பெயின், ரஷ்யா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் நாள்தோறும் கொரோனா தொற்றிற்கு உள்ளாவோர் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.