சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் வசமுள்ள மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்ட அறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையின் தவசாளர் நாகமணி கதிரவேல் (சிறீலங்கா சுதந்திரக்கட்சி) தலைமையில் வரவுசெலவுத்திட்ட அமர்வு இடம்பெற்றது.
வரவு செலவு திட்ட கூட்ட ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் சி.சர்வானந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் வி.மோகனராஜன் ஆகியோர் குறித்த வரவு செலவுத்திட்டம் திருத்தம் இல்லாமையினால் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினர்.
இதனடிப்படையில் வரவு செலவு திட்டத்தை வாக்கெடுப்பிற்கு விடுமாறும் தவிசாளர் சபையில் அறிவித்தார்.
இதனிடையே கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் மு.முரளிதரன் தெரிவிக்கையில், “இங்கிருக்கின்ற உறுப்பினர்களை முட்டாளாக்க நீங்கள் நினைக்கூடாது இங்கு எமக்கு வழங்கப்பட்ட கடிதத்தை பார்த்தால் திருத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் இங்கு ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அப்படி இங்கு குறிப்பிடப்படவில்லை.
நீங்கள் வரவு செலவு திட்டத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக நீங்கள் எடுத்த நடவடிக்கையை விட கடந்தகாலத்தில் அபிவிருத்திகள் செய்திருக்கலாம்” என்றார்.
இதனிடையே கருத்து தெரிவித்த த.தே.கூட்டமைப்பின் சபை உறுப்பினர் சி.சர்வானந்தன் “எமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கடிதத்தை பார்க்கும் போது சட்டத்திற்கு முறைனான செயற்பாடு இடம்பெற்றுள்ளது” எனக் கூறியவாறே கடிதத்தை கிழித்தெறிந்தார்.
இதன் பின் வாக்கெடுப்பு இடம்பெற்றது.வாக்கெடுப்பில் தவிசாளர் உட்பட 08பேர் ஆதரவாக வாக்களித்ததுடன் 22பேர் எதிராக வாக்களித்தனர் இதையடுத்து அடுத்த ஆண்டிறாகன வரவு செலவுத்திட்டம் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையில் தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.