‘என் கருத்து, சிங்கள நண்பர்களுக்கு புரிந்துள்ளன, தமிழ் பேசும் “அறிவாளிகளுக்கு” புரியல’ – மனோ

தமிழ் முற்போக்கு கூட்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கடந்த வாரம், “நாட்டை 10 வருடம் தாருங்கள் முன்னேற்றி தருகிறோம்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வெளியிட்டுருந்தார்.

அந்த விடயம் தமிழ் ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக காணப்பட்டது.இந்த நிலையில் மனோ கணேசன்,   கடந்த வாரம் தான் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள் தொடர்பில் இன்று மீண்டும் ஒரு அறிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,

“நாட்டை 10 வருடம் தாங்கோ..! முன்னேற்றி 11ம் வருடத்தில் தாறோம்..!” என்றும் கூறினேன். இவை பல சிங்கள நண்பர்களுக்கு புரிந்துள்ளன. ஆனால் சில தமிழ் பேசும் “அறிவாளிகளுக்கு” புரியல. முதலில், “அதெப்படி நம்நாட்டு இறைமை பறிபோகுது அல்லவா?” என தமிழ் தேசியவாதிகளே என்னில் குற்றம் கண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், தகடந்த வார என் ஊடக கூப்பாடுகளில்,

(01) “துறைமுக நகரை எதிர்ப்போம்..! ஆனால் ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல், இதன்மூலம் மாறும் உலக சக்திகளின் நகர்வுகளை எப்படி பயன்படுத்தலாம் என யோசிப்போம்..!” என்றும்,

(02) “நாட்டை 10 வருடம் தாங்கோ..! முன்னேற்றி 11ம் வருடத்தில் தாறோம்..!” என்றும் கூறினேன். இவை பல சிங்கள நண்பர்களுக்கு புரிந்துள்ளன. ஆனால் சில தமிழ் பேசும் “அறிவாளிகளுக்கு” புரியல.

(01) முதலில், “அதெப்படி நம்நாட்டு இறைமை பறிபோகுது அல்லவா?” என தமிழ் தேசியவாதிகளே என்னில் குற்றம் கண்டார்கள். “தேசபக்தி” எனக்கு இவர்களை விட அதிகமாக இருக்கிறது. ஆனால் எனக்கொரு சந்தேகமும் இருக்கிறது.

தமிழர்களாகிய எம்மை, நமது அரசுகள், இலங்கையின் இறைமையில் ஒருபோதும் பங்காளிகளாக கருதுவதே இல்லையே..! இந்நிலையில், “இறைமை சீனாவிடம் பறிபோகிறது” என நாம் ஏன் கூவ வேண்டுமென எனக்கு தெரியலை. அதான் அப்படி சொன்னேன்.

அலட்டிக்கொள்ள வேண்டாமே தவிர, நாடாளுமன்றில் மிக தெளிவாக எதிர்த்து வாக்களித்தோம். மற்றபடி, உலக அரசுகள், இந்த துறைமுக நகர் பற்றி இனிமேல் எடுக்கப்போகும் நகர்வுகள் என்ன? அவற்றை நாம் எப்படி பயன்படுத்தலாம்? என மட்டும் நாம் கவனமாக நோக்க வேண்டும் என கூறினேன்.

(02) அப்புறம், நமக்கு இவர்கள் “பத்து வருடத்துக்கு” நாட்டை தரவா போறார்கள்? இல்லையே! அவர்களது நண்பர் கதிர்காமருக்குக்கூட கொடுக்கலையே! உண்மையில், நான் இதன்மூலம் ஒரு கருத்தை விதைத்தேன். நாடெங்கும் வாழும் தமிழ் மனங்களின் ஆதங்கத்தை நான் எதிரொலித்தேன்.

“லீ குவானும்”, “மஹதிரும்” கூட 1950களில் கண்டு பிரமித்த “சிலோனை”, இப்படி “சிங்கள-பெளத்த மட்டும்” என்ற இனவாத பல்லவியை பாடி சீரழித்து, ஆசியாவில் கடைநிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களேடா பாவிகளா? என்பதுதான் என் கூப்பாட்டின் உள்நோக்கம். அவ்வளவுதான்!

இதற்குள் இன்னும் சில “அதிபுத்திசாலிகள்”, “உங்கள் நல்லாட்சியில் என்ன செய்தீர்கள்?” என குறுக்கு கேள்வி கேட்கிறார்கள்.

அட, அவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். 1948லிருந்து இன்றுவரை ஆண்ட எல்லோருமே சிங்கள-பெளத்த மட்டைகள்தான். நல்லாட்சியில் கொஞ்சம் நெகிழ்வுதன்மை இருந்தது. அதை பயன்படுத்தி, அந்த நாலே வருடத்தில் சண்டையிட்டுதான், சில விடயங்களை செய்தோம்.

ஆகவே, மக்கள் மனங்களில் உள்ள கருத்துகளை எதிரொலித்து, கலந்துரையாடலை ஆரம்பிப்பதுதான், நல்ல மக்கள் பிரதிநிதியின், கட்சி தலைவனின் முதற்பணி.

அடுத்து, தேசிய, சர்வதேசிய நகர்வுகளை கவனமாக அவதானித்து, நமது மக்கள் நலன்சார் முடிவுகளை எடுப்பது அடுத்த பணி. அப்புறம்தான் மற்ற எல்லாமே” என தெரிவித்துள்ளார்.