எதிர்கால விசாரணைகளுக்காக ஆதாரங்களை பாதுகாப்பதற்கானபொறிமுறை – அரசாங்கம் நிராகரிப்பு

எதிர்கால விசாரணைகளுக்காக ஆதாரங்களை பாதுகாப்பதற்கான அமைப்பினை உருவாக்கவேண்டும் என்றகோரிக்கையை  சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அவ்வாறான பொறிமுறைக்கு அரசாங்கம் இணங்காது அனுமதியளிக்காது என வெளிவிவகார செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
நாங்கள் வெளிப்படையாக இதனைநிராகரிக்கின்றோம்-இது மனித உரிமை பேரவையின் ஆணைக்கு அப்பாற்பட்ட விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமைபேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிராகரிப்பதற்கு சிறீலங்கா தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
நியாயமற்ற பக்கச்சார்பான தீர்மானத்தை அரசாங்கம் எதிர்க்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விடுமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையினை நாங்கள் ஏற்கனவே இரண்டு தடவை நிராகரித்துள்ளோம் இந்த தீர்மானம் அதனை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள அவர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை நடத்துமாறு வேண்டுகோள் விடுப்பது குறித்து நட்பு நாடுகளுடன் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.