Home ஆய்வுகள் எதிரியின் பலம் – பலவீனம் அறிந்து மத்திய கிழக்கில் திறக்கப்பட்டுள்ள களம்

எதிரியின் பலம் – பலவீனம் அறிந்து மத்திய கிழக்கில் திறக்கப்பட்டுள்ள களம்

ஓக்டோபர் மாதம் இறுதி வாரம் என்பது ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் ஒரே இரவில் யாழ்குடாநாட்டில் இடம்பெயர்ந்த துன்பமான நிகழ்வுகளை தாங்கி நிற்கும் மாதமாகும். சமாதானதுக்கான போர் என்ற போர்வையில் மக்கள் செறிவாக வாழும் யாழ் குடாநாடு மீது கண்மூடித்தனமான எறிகணை மற்றும் குண்டு வீச்சுக்களுடன் சந்திரிக்கா ஆரம்பித்த போர் அது.

தமிழர்கள் எத்தனைபேர் கொல்லப்பட்டாலும், பரவாயில்லை சிங்கள மக்களின் நலனும், தனது அரசியலும் முக்கியமென சிங்களதேசம் தொடுத்தபோர். அனைத்துலக சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் அன்றும் பார்வையாளர்களாக இருக்க இலங்கை அரசு தான் நினைத்ததை செய்ய அன்றும் முடிந்தது, இன்றும் அது அதனை தான் செய்கின்றது.

இன்று இஸ்ரேல் அரசு தனது நாடும் தனது மக்களும் எவ்வாறு முக்கியம் என நினைத்து செயற்படுகின்றதோ அதனை ஒத்த நடவடிக்கை தான் அது. ஆனால் இன்று பாலஸ்தீனத்திற்கு அருகில் உள்ள முஸ்லீம் நாடுகளும், உலகில் உள்ள முஸ்லீம் மக்களும் ஆதரவாக உள்ளனர். ஆனால் எமக்கு அருகில் உள்ள இந்தியா தான் பிரதான எதிரியாக உள்ளது.

இந்த நிலையில் தான் ஹமாஸ் அமைப்பு ஒரு விடுதலைப் போரட்ட அமைப்பு என துருக்கியின் அரச தலைவர் எர்டோகன் தெரிவித்த கருத்துக்கு இஸ்ரேல் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

edogarn turkey எதிரியின் பலம் - பலவீனம் அறிந்து மத்திய கிழக்கில் திறக்கப்பட்டுள்ள களம்முழு மேற்குலகமும் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றனர். ஆனால் இஸ்ரேலை அவர்கள் அவ்வாறு பார்ப்பதில்லை. ஆனால் துருக்கி அவ்வாறு ஹமாஸை பார்க்காது. அவர்கள் விடுதலைப்போரட்ட அமைப்பு, பயங்கரவாதிகள் அல்ல. நிலத்தை பாதுகாக்க போரடுகின்றனர்.

இஸ்ரேல் குழந்தைகளை கொல்கின்றது அதனை நாம் அனுமதிக்க முடியாது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு மேற்குலகம் முழு ஆதரவுகளை வழங்குகின்றது. இஸ்ரேலையும், முழு உலகத்தையும் நான் ஒன்று கேட்கிறேன் நீங்கள் மேற்குலகத்திற்கு கடமைப்பட்டிருந்தால் ஹமாஸை பயங்கரவாதிகள் என கூறுங்கள் ஆனால் துருக்கி அப்படி செய்யாது என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கான தனது பயணத்தையும் அவர் நிறுத்தியுள்ளதுடன், இஸ்ரேலுடன் மத்தியதரைக்கடல் ஊடாக மேற்கொள்ளவிருந்த எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தையும் நிறுத்தியுள்ளார். இந்த திட்டம் இன்னும் சில வருடங்களில் ஆரம்பிக்கப்படவிருந்தது.

மேற்குலகத்திற்கும் கிழக்குக்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்து வருவதையே எர்டோகனின் கருத்தும், மேற்கு நாடுகளின் தூதுவர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு லிபியா மேற்கொண்டுள்ள நடவடிக்கையும் காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பை பொறுத்தவரையில் மேற்குலக நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகள் அதனை தடை செய்யவில்லை. இந்தியா ஹமாஸ் அமைப்பை தடை செய்யவேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியாவுக்கான இந்திய தூதுவர் மேற்கொண்டு வருகின்றார். மேற்குலகம் தவிர ஹமாஸை கண்டித்த உலக நாடுகளில் இந்தியா மட்டுமே உண்டு.

இதனிடையே, இஸ்ரேலுக்கான பைடனின் பயணத்தின் போது தரையிறக்கப்பட்ட அமெரிக்காவின் சிறப்பு படையணிகளை சேர்ந்த கொமோண்டோ படையினர் இஸ்ரேலிய படையினருடன் இணைந்து காசாவுக்குள் நுளைந்தபோது ஹமாஸ் படையினர் சுற்றிவளைத்து தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாகமான பென்ரகனின் முன்னாள் ஆலோசகர் டக்ளஸ் மக்கிரகொர் தெரிவித்துள்ளார்.

இந்த படையினர் பணயக்கைதிகளின் இருப்பிடம் மற்றும் ஹமாஸ் படையினரின் பலம் தொடர்பில் புலானாய்வுத்தகவல்களை அறிவதற்காக சென்றவர்கள். தற்போதைய பாலஸ்தீன – இஸ்ரேல் மோதல் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான மோதலாக மாறலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்த மோதல்களில் கிஸ்புல்லா படையினர் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரெல்லா தெரிவித்துள்ளார். அதேசமயம், ஹிஸ்புல்லாக்களின் தொடர் தாக்குதல்களில் இஸ்ரேலின் பல டாங்கிகளும், பாதுகாப்பு நிலைகளும் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இஸ்ரேலிய இராணுவம் தமது நவீன மேக்காவா டாங்கிகளை ஹிஸ்புல்லாக்களின் கொனெற் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக பக்கவாட்டில் மேலதிக பாதுகாப்பு கவசங்களை பொருத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றும் இஸ்ரேலின் நகரங்கள் மீது ஹமாஸின் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இந்த நிகழ்வுகள் இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர் லெபனானை நோக்கி விரிவடைந்துவரும் நிலையில் சவுதி அரேபியாவின்அரசர் பின் சல்மான் அமெரிக்க அதிபருடன் மேற்கொண்ட பேச்சுக்களை தொடர்ந்து சவுதிஅரேபியா லெபனானில் உள்ள தனது இராஜதந்திரிகளையும், அவர்களின் குடும்பங்களையும் வெளியேற்றிவருகின்றது.

இஸ்ரேல் மற்றும் மத்தியகிழக்கில் உள்ள தனது 6 இலட்சம் மக்களை வெளியேற்ற அமெரிக்காவும் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்மதி படங்களின் அடிப்படையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளம் மீதான ஆளில்லாத தாக்குதல் விமானங்களின் தாக்குதல்களில் சேதமடைந்த தளத்தின் பகுதிகள் காணப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் 4 அமெரிக்க படையினா காயமடைந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதாவது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களையும் ஆபத்துக்கள் சூழ்ந்துவருவதை அவதானிக்க முடிகின்றது.

இதனிடையே, மத்தியதரைக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலில் அதிகளவான ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் கொண்டுவரப்பட்டு தரையிறக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் அதேசயம், எகிப்த்தும் தனது ஆயுதப்படைகளை தயார்படுத்தி வருகின்றது.

துருக்கியின் கருத்துக்கு கட்டார் அரசு தனது ஆதரவுகளை தெரிவித்துள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட பாலஸ்தீனப் பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்று கடந்த வியாழக்கிழமை (26) ரஸ்யாவுக்கு சென்றுள்ளது இந்த போர் மற்றுமொரு பரிமாணத்தை நோக்கி செல்வதை காட்டுகின்றது.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், பணயக்கைதிகளை விடுவிக்ககோரியும் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தினால் முறியடித்துள்ளன. அதனை முறியடிக்குமாறு ஈரான் இந்த இரு நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் தீர்மானம் முறியடிக்கப்பட்டதற்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு தற்போது ரஸ்யா சென்றுள்ளது மத்தியகிழக்கின் களமுனையில் ஏற்படப்போகும் மாற்றத்தை தான் காண்பிக்கின்றது.

1983 களில் ஆப்பானிஸ்தானில் நிலைகொண்டிருந்த ரஸ்யப்படைகளுக்கு எதிராக போராடிய முஜாகுதீன் போரளிகளை அமெரிக்கா அரசு அன்று வெள்ளைமாளிகைக்கு அழைத்து ஆயுதங்களை வழங்கிய நிகழ்வுக்கு ஒப்பானது இது.

அதேசமயம், இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு பைடன் வழங்கவிருந்த 106 பில்லியன் டொலர்களை அமெரிக்காவின் செனற்சபை தடுக்கலாம் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளதாக பொலிற்றிக்கோ ஊடகம் தெரிவித்துள்ளது. குடியரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பிளவு காரணமாக வாக்குகளை ஒருங்கிணைப்பது கட்சிக்கு கடினமானதாக உள்ளது.

நாடாளுமன்ற பேச்சாளரை கூட நியமிக்கமுடியாத நிலையில் அமெரிக்காவின் அரசியலும், தனது கூட்டணி நாடுகளுக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்க முடியாத நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரமும் தேக்கமடைந்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் திறக்கப்பட்டுள்ள களம் ஒரு காத்திரமான மாற்றத்தை கொண்டுவரும் என்பதை தான் நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன.

 

Exit mobile version