எங்கள் காணிகளை விட்டு வெளியேறுங்கள் மட்டுநகரில் ஆர்ப்பாட்டம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் வசிக்கும் மக்கள் கலந்துகொண்டு, தமது பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினர்.

குறிப்பாக அபிவிருத்தி எனும் பெயரிலும் பாதுகாப்பு என்ற போர்வையிலும் பெருமளவான காணிகள் அபகரிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

‘வனஜீவராசிகள் திணைக்களமே எமது காணிகளை அபகரிக்காதே’, ‘அரச திணைக்களங்களே எமது காணிகளை அபரிக்காதே’, ‘இராணுவமே எமது காணிகளைவிட்டு வெளியேறு’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, கல்குடா, புல்லுமலை, வாழைச்சேனை, வாகரை போன்ற இடங்களில் அரசபடையினர், அரசியல்வாதிகள், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீள மக்களிடம் வழங்கவேண்டும் எனவும் போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டது.