ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவதற்கு  சட்டத்தரணி செல்வராஜா டினேசன் கடும் கண்டனம்

இலங்கையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களால்  ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றார்கள். இதற்கு மன்னார் சட்டத்தரணியும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞரணி உப தலைவருமான செல்வராஜா டினேஷன் அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் பொழுது, ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று சொல்லப்படுகின்ற ஊடகவியலாளர்கள் அரசியல் மற்றும் மக்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதில் யுத்த காலம் தொடங்கி இன்று வரை பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
இந்த ஊடக செயற்பாட்டினால் பலர் தங்களுடைய உயிர்களையும் இழந்துள்ளார்கள்.
இவ்வாறு இருக்கையில் அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு கும்பல் ஒன்று அங்கு  செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை அச்சுறுத்தி அவருடைய அவருடைய மகனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து உள்ளார்கள்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இழுப்பைக்கடவை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட அட்டை மற்றும் இறால் பண்ணைகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் ஊடகவியலாளருக்கம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் பொதுச் சமுதாயத்தின் வளர்ச்சியில் பின்னடைவையே ஏற்படுத்தும் எனவே அனைத்து தரப்பினரும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும்.
ஆகவே அரசாங்கமும் பொதுமக்களும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு எந்த ஒரு ஊறும் விளைவிக்காமல் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்