உத்தரகண்ட் கும்பமேளாவில் குவியும் பக்தர்கள்- அதிகரிக்கும் கொரோனா தொற்று

உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் 102 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக கும்பமேளா கொண்டாட்டத்தை இரத்து செய்யுமாறு மருத்துவ நிபுணர்கள்  அம் மாநில அரசுக்குத் தெரிவித்த போதும், அரசு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்படிக்கப்படும் என கூறி கும்பமேளா கொண்டாட்டத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.

இதனால் பெரும் திரளான மக்கள் கூட்டம், கங்கை கரையில் கூடி வருகின்றனர். இது வரையில் 102 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கும்பமேளா குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் திரந் சிங் ராவத், “நாங்கள் கொரோனா தடுப்பு விதிகளை 100 வீதம் பின்பற்றுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் எந்த சுகாதார விதிமுறைகளையும் மக்கள் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், “கடந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய போது, நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டை “கொரோனா ஜிகாத்“ என கூறி அதற்கு எதிரான கடுமையான பிரசாரத்தை மேற்கொண்ட அரசியல்வாதிகள், செய்தி நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் தற்போது நடைபெறும் கும்பமேளா தொடர்பாக எந்தக் கருத்தும் கூறாமல் ஏன் அமைதியாக இருக்கின்றனர். உங்களுடைய கபடநாடகம் அம்பலப்பட்டுவிட்டது.“இது மாபெரும் குற்றம்“ என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.

உத்தரகண்ட் ஹரித்வார் நகரத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா கொண்டாட்டத்தில்  கலந்து கொண்டு கங்கையில் நீராடுவதால் தங்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.