Tamil News
Home செய்திகள் ஈழப்போர் குறித்து கருத்துத் தெரிவித்த தென்னிந்திய பிரபல இயக்குநர்

ஈழப்போர் குறித்து கருத்துத் தெரிவித்த தென்னிந்திய பிரபல இயக்குநர்

லண்டனில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதிப் பங்களிப்புடன் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில், வசந்த நகர் பதியில் மாதிரிப் பண்ணை திறந்து வைக்கப்பட்டது.

நேற்று(4) இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா, தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.ஸ்ரீதரன், லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதிப் போரின் போது எதிரிகளின் சூழ்ச்சியினால் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டுள்ளோம் என்றும் நிரந்தரமாக வீழ்த்தப்படவில்லையெனவும் திரைப்பட இயக்குநரும், ஈழ ஆதரவாளருமான இயக்குநர் அமீர் தெரிவித்தார்.

அத்தோடு மத நம்பிக்கையுடையவர்கள் கோயிலுக்குள் நுழையும் போது என்ன பரவசம் இருக்குமோ அதே மனநிலைதான் இம்மண்ணில் காலடி பதிக்கையில் தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பண்ணையின் பெயர் பலகையினை இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, பண்ணையினை லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் நாடா வெட்டித் திறந்து வைத்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் குறித்த மாதிரிப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இயக்குநர் அமீர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “2007ஆம் ஆண்டு இம்மண்ணிற்கு வருவதற்கு நான் ஆயத்தமானேன். இதன் போது சீமானிடம் சென்று இலங்கைக்கு சென்று போராட்டங்களைப் பார்க்க வேண்டுமெனக் கோரினேன். அந்தப் போராட்டங்களை உலக அரங்கிற்கு பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தேன்.

இதன் போது அவர் என்னிடம், சிறிது நாட்கள் பொறுமையுடன் இருக்குமாறும் நாம் அங்கு சென்று ஈழப் புலிகளின் திரைப்படத்தை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நான் மிகவும் ஆவலாக இருந்தேன். எனினும் எதிரிகளின் சூழ்ச்சியினால் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டுள்ளோம் என்றே நான் நினைக்கின்றேன். நிரந்தரமாக வீழ்த்தப்படவில்லை.“ என மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version