Tamil News
Home செய்திகள் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் – பாட்டாளி மக்கள் கட்சி

ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் – பாட்டாளி மக்கள் கட்சி

பா.ம.க. நடத்திய புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கூடாது என்றும், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பா.ஜ.க, அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாமக, இந்தியா முழுவதும் சர்ச்சையாகி வரும் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது. அதிமுகவும் ஆதரித்தது. அதிக தலைவர்கள் NRC (National Register of Citizens)  சட்டத்தையும் ஆதரித்து வருகின்றனர். ஆனால் பாமக நடத்திய பொதுக் குழுவில் தற்போது NRC சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பாமக நிறுவுனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டம் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கின்றது. தமிழ் நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் அனைத்து வசதிகளுடன் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான உரிமை பெற்று கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கின்றது. தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் அனைத்து வசதிகளுடன் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான உரிமை பெற்று கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும்.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் குடியுரிமை பெற்று விட்டால், அதன் பின்னர் ஈழத்திற்குத் திரும்ப முடியாது. தங்களின் தாயகமான ஈழத்தை நிரந்தரமாக இழந்து விடுவோம் என அஞ்சுகின்றனர். அதனால் தான் ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்றவர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் குடியுரிமை பெறாமல் வசிக்கின்றனர்.

அதே நேரத்தில் என்றாவது ஒரு நாள் தாயகம் திரும்ப இயலும் என்று நினைக்கும் ஈழத்தமிழர்கள், அதுவரை தமிழகத்தில் தாங்கள் கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அதனால்தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எத்தகைய குடியுரிமை வேண்டும் என்பதை, அவர்களின் விருப்பம் அறிந்து அதற்கேற்றவாறு தீர்மானிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகின்றது.

ஈழத் தமிழர்கள் தங்களின் சொந்த நாட்டிற்குக் குடியுரிமையை இழக்காமல் தமிழகத்தில்  கண்ணியத்துடனும், மதிப்புடனும் வாழ்வதை உறுதி செய்ய சிறந்த வழி அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதுதான். இலங்கையைச் சேர்ந்தவர்கள் இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற்றால் அவர்களின் இலங்கைக் குடியுரிமை தானாக இரத்தாகி விடும்.

அதற்கு வசதியாக, இலங்கை அரசுடன் இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டு, ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை பாமகவின் புத்தாண்டு சிறப்புக் குழு கேட்டுக் கொள்கின்றது.

தமிழ்நாடு பிற நாடுகளுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலம் அல்ல. அதனால் பிறநாட்டு மக்கள் தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வாய்ப்பு இல்லை. இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த ஈழத் தமிழர்கள் அனைவரின் விபரங்களும் அரசிடம் உள்ளன. இதனால், தமிழ் நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு திடடத்தைச் செயற்படுத்துவதற்கான தேவை இல்லை.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தயாரித்தால் அது தமிழக மக்களிடம் தேவையற்ற அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும். எனவே தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயற்படுத்தக்கூடாது என்று பாமக பொதுக்குழுக் கூட்டம் கோருகின்றது.

Exit mobile version