ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கு இந்திய அரசு மதிப்பளிக்க வேண்டிய காலம் – சீமான்

ஈழத் தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு இந்திய அரசு மதிப்பளிக்க வேண்டிய காலம் தொடங்கி விட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கான மாவீரர் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று மாவீரர் நாள்.  நம் மொழி காக்க, நம் இனம் காக்க, நம் மண் காக்க, நம் மானம் காக்க தன்னுயிரைத் தந்து இந்த மண்ணிற்கு விதையாகிப் போன மாவீரர் தெய்வங்களைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தைத் தங்களது உயிர் ஈகத்தால் உலக வரலாற்றின் புரட்சிகரப் பக்கங்களில் உதிர எழுத்துக்களால் பொறித்துச் சென்ற புனிதமானவர்களை நம் உயிரில் நிலைநிறுத்தி வணங்குகின்ற நாள்.

மாவீரர்கள்! இந்த உலகம் இதுவரை கண்டிராத மகத்தான மாமனிதர்கள். அடிமைப்பட்டுக் கிடக்கின்ற தாய் மண்ணின் விடுதலை என்கின்ற புனித இலக்கினை தன் வாழ்வின் உயரிய குறிக்கோளாகச் சுமந்து அந்த இலட்சியத்திற்காகவே வாழ்ந்து, அந்த உயரிய இலட்சியத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்து இந்த மண்ணுலகில் மங்காத புகழை அடைந்தவர்கள். ஆற்றங்கரைகளில் நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து மனித இனம் தனது எழுச்சிக்காக போராடி வருகிறது.

தன் மீது விதிக்கப்படும் அனைத்து அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலைபெற ஒவ்வொரு காலகட்டத்திலும் அது முயன்று வருகின்றது. இதுவரை எழுதப்பட்ட வரலாறு அனைத்துமே மனிதர்களின் கட்டுப்படுத்த முடியாத விடுதலை உணர்ச்சியின் பெரும் கதையாடல்கள்தான். நாகரிக வளர்ச்சியில் சக மனிதனை அடிமை கொள்கின்ற, சுரண்டிக் கொழுக்கின்ற, அடுத்தவன் நிலத்தைப் பிடுங்கி அபகரிக்கின்ற இன்னொரு மனிதன் தோன்றும் போது, அநீதியும், வல்லாதிக்கமும் தோன்றுகின்றன.

அதேசமயத்தில், அதற்குச் சற்றும் குறையாத வடிவத்தில் நீதியும், புரட்சிகர எழுச்சியும் இணைந்தே தோன்றுகின்றன. அடிமைப்படுத்தப்பட்டவன் எழ முயற்சிக்கின்றான். தன்மீது பிணைக்கப்பட்டு இருக்கிற வல்லாதிக்கச் சங்கிலிகளை உடைத்தெறிய உன்மத்தம் கொள்கின்றான். காலங்காலமாக மானுட இனம் வகுத்து வைத்திருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாக வைத்து வீழ்த்துபவர்களுக்கும், வீழ்த்தப்படுபவர்களுக்கும் இடையிலான போர்தான் வரலாறு முழுக்க நிரப்பப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு இனமும் தன் தாய் நிலத்தில் மானத்தோடும், இறையாண்மையோடும், அடக்குமுறைகள் அற்ற முழு விடுதலையோடும் வாழ எப்போதும் போராடி வருகின்றன. அவ்வாறே தமிழ்த் தேசிய இனமும் தனது தாயக விடுதலைக்காக நீண்ட காலமாகப் போராடி வருகிறது.

தமிழர்களின் தாய் நிலங்களில் ஒன்றான ஈழப் பெருநிலம் சிங்கள அடிப்படைவாதத்தால் அடிமைப்படுத்தப்பட்டு மண்ணின் பூர்வகுடி மக்கள் தனது சொந்த மண்ணிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றப்பட்டு எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டு அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்ட போது, தாங்கள் இன்னுயிரை ஈர்ந்தாவது தாய் மண்ணை மீட்டாக வேண்டும் என்கின்ற உறுதியில் பெரும் புயலென புறப்பட்டவர்கள் நம் மாவீரர்கள். தமிழீழம் என்பது ஈழப்பெருநிலத்தில் வாழும் தமிழர்களுக்கான தாயகம் மட்டுமல்ல. இந்த உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனுக்குமான தாய்நிலம். ஆதியில் தோன்றிய தமிழினம் குமரிக்கண்டமாய் பரவி விரிந்து கிடந்த போது, தமிழீழமும், தாயகத் தமிழகமும் ஒரே நிலங்களாகத் தான் இருந்தன. ஒரு தாய் மக்களாக, ஒரு இனத்தின் மாந்தராகவே தமிழர்கள் உருவாகி செழித்தார்கள்.

இதை நவீன காலத்து அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. இடையில் புகுந்த கடலாலும், நிகழ்ந்த கடல்கோள்களாலும் ஒரு இனத்து மக்கள் வாழ்ந்த ஒரே நிலம் தாயகத் தமிழகம். தமிழீழம் என்று இரண்டு நிலங்களாகப் பிரிந்தன. ஈழத்தில் பூர்வக் குடிமக்களான தமிழர்கள் அந்நிலத்தில் முழு இறையாண்மையோடு அரசாண்டு வந்தார்கள். ஆனால் இடையில் வந்த சிங்களவர்கள் நமது தாய் மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்த நிலத்தில் நீடித்து நிலைத்து வாழ்ந்த ஆதி குடிகளான தமிழர்களின் நிலங்களை அபகரித்து, உரிமைகளை பறித்து சொந்த மண்ணிலேயே அடிமை ஆக்கினார்கள். விடுதலை கோரி நின்ற விழிகளை சிங்கள இனவாதிகள் தங்கள் காலணிகளால் மிதித்து அழித்தார்கள். உரிமை கோரி உயர்ந்த கரங்களை சிங்களவர்கள் தனது இனவாத வாளால் வெட்டி எறிந்து இறுமாப்புடன் சிரிப்பு சிரித்தார்கள்.

உலக வல்லாதிக்கங்களின் உதவியோடு, தனது இனவாத அரசதிகாரத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவித்து ஒரு பாரிய இனப்படுகொலையை நிகழ்த்திய பிறகும் இனவெறி அடங்காது தமிழினத்தை முழுமையாக அழிக்கத் துடிக்கிறார்கள். சிங்கள இனத்துவேசிகள். அடிமைப்பட்ட இனத்தின் வெடித்தெழும் கோபத்தோடு மண்ணை மீட்க எமது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் பல்லாயிரக் கணக்கான தமிழின இளையோர் தங்கள் உயிரை ஏந்தி, தாய் மண்ணை காக்க ஆயத்தமானார்கள். அதுவரை மூடிக் கிடந்த உலகத்தின் செவிகளை தங்களது புரட்சி முழக்கத்தின் கூலமாக வெடிவைத்து தகர்த்தார்கள். உயிரையும் இழக்கத் தயாராகி விட்ட அம் மாவீரர்களின் ஈகங்கள் அடைத்துக் கிடந்த உலகத்தின் விழிகளை திறக்க வைத்து ஈழத்தின் பக்கம் திரும்ப வைத்தன. நெஞ்சுரமும் துணிவுமிக்க ஒரு இளம் தலைமுறை சாகவும் துணிந்து நிற்கும் போது அதுவரை எழுதப்பட்டிருந்த அனைத்து அடிமை விதிகளும் மாற்றி எழுதப்படத் தொடங்கின.

அளப்பரிய தன் சாகசங்களால் அடிமைப்பட்டு அல்லலுற்ற தமிழ் மண்ணை தங்கள் உயிரை விதைத்து தமிழீழ சோசலிச குடியரசு நாடாக உருவாக்கினார்கள் மாவீரர்கள். போர்க் களங்களில் துளியளவுகூட அறம் பிசகாது தலைவரின் சொல் பற்றி நின்று மக்களைக் காத்த மனித உருவிலான தெய்வங்கள் எங்கள் மாவீரர்கள். உலகமே வியக்கும் வண்ணம் ஈகங்கள் பல செய்து, தாயக விடுதலைக்காக போராடி நின்ற மாவீரர் கனவாக உருவான ஈழ தேசத்தை சிங்கள இனவாத அரசு உலகில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்து உலக வல்லாதிக்க இராணுவ பலத்தோடு அழித்து முடித்தது. இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து மறுக்க முடியாத இனப்படுகொலை ஒன்றைத் திட்டமிட்டு நிகழ்த்தி சிங்கள அரசு பேயாட்டம் ஆடி பத்து ஆண்டுகள் கடந்து விட்டன.

தன் சொந்த நிலத்திலேயே முள்வேலி கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு தமிழர்கள் முடக்கப்பட்டார்கள். 10 ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும் இனப்படுகொலைக்கான நீதி இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. போரின் போதும்  அதற்குப் பிந்தய காலகட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களைப் பற்றி இதுவரை ஒரு தகவலையும் சிங்கள அரசு தெரிவிக்கவில்லை. உலகத்தின் அனைத்து மன்றங்களிலும் கடக்க முடியா வலியோடும், காய்ந்திடா கண்ணீர் தடத்தோடும் சிங்கள இனவாதிகள் நிகழ்த்திய இனப்படுகொலை குறித்தும், தமிழர்களின் நிர்ணய உரிமை குறித்தும் நாம் முறையிடடு வருகின்றோம். இதுவரை தமிழத் தேசிய இனத்திற்கு உரிய நீதி கிடைத்துவிடவில்லை.

இன்று சூழல்கள் மாறியிருக்கின்றன. இனப்படுகொலை நிகழ்த்தி தமிழினத்தை அழித்து முடித்த ராஜபக்ஸ குடும்பத்தினர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருக்கின்றார்கள். முன்னைப் போலவே மிண்டும் ஒரு இனப்படுகொலை நடக்க அனைத்து வாய்ப்புகளும் கூடி வருகின்ற அச்சச் சூழல் ஈழப் பெருநிலத்தில் நிலவுகின்றது. ஒருபோதும் சிங்கள அதிபர் கோத்தபயா ராஜபக்ஸ இந்திய அரசிற்கு ஆதரவாக நடந்து கொள்ள மாட்டார் என்பதும், அவர் சீன வல்லாதிக்கத்தின் அடியாள் என்பதும் அனைவருக்கும் தெரியும். இந்திய எல்லை அருகே சீன வல்லாதிக்கம் வலிமை பெறுவதென்பது எதிர்கால இந்திய அரசின் நலன்களுக்கு மிகவும் கேடானது. எதிரானது. ஆபத்தானது. இதுவரை இந்திய அரசு கடைப்பிடித்து வந்த பிழையான வெளியுறவுக் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரத்தை சமீபத்திய இலங்கையின் தேர்தல் முடிகள் உருவாக்கி விட்டன.

தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு இந்திய அரசு மதிப்பளிக்க வேண்டிய காலம் பிறந்து விட்டதாகவே கருதுகின்றேன். நீண்ட நெடிய காலமாய் விடுதலை தாகத்தோடு துடித்துக் கொண்டிருக்கும் ஈழ மக்களுக்கு சர்வதேச சமூகத்தின் முன்னால் நடத்தப்பட வேண்டிய சுயநிர்ணய உரிமை குறித்தான வாக்கெடுப்பு ஒன்றே தீர்வாக அமையும். இனியும் சர்வதேச சமூகம் கனத்த மௌனம் காட்டாமல் இனப்படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது தான் தமிழர்கள் இதுவரை பட்ட துயரங்களுக்கு தீர்வாக அமையும். இவ்வாறு சீமான தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.