ஈரான் நாட்டின் எவின் சிறையில் பெரும் தீ- பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்

ஈரானில் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் மோசமான சிறைச்சாலையான எவின் சிறையில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டு நான்கு கைதிகள் மரணமடைந்ததாகவும், 61 கைதிகள் காயமடைந்திருப்பதாகவும் ஈரானின் அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

ஆனால்,  இந்த  இறப்பு  எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக வெளியாகியுள்ள  காணொளிகளில் தீப்பிழம்புகள் மற்றும் புகையைப் பார்க்கமுடிகிறது. மேலும் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிச் சத்தத்தையும் கேட்க முடிகிறது.

இந்நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஈரான் அரசு ஊடகங்களில் அதிகாரிகள் கூறினாலும், தீ தொடர்ந்து எரிவதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

கடந்த மாதம் மாசா அமினி என்ற குர்திஷ் இனப் பெண்  காவல்துறை காவலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஈரானில் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.