ஈரானின் புதிய அதிபர் குறித்து இஸ்ரேல் எச்சரிக்கை

ஈரானில் எப்ராஹீம் ரையீசி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சர்வதேச நாடுகள் அதீத கவலை கொள்ள வேண்டும் என இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான லியோர் ஹையட் எச்சரித்துள்ளார்.

பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கவும், ஊழலை ஒழிக்கவும் தம்மால் முடியும் என்று வாதிட்டு ஈரானின் அதிபர் தேர்தலை சந்தித்த இப்ராஹிம் ரையீசி வெற்றிப் பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

ஓகஸ்ட் மாதம் பதவியேற்கவுள்ள ரையீசி, ஈரானின் உயர் நீதிபதிகளில் ஒருவர். பழமைவாத கொள்கைகளை கொண்டவர். அவருக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. மேலும் அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கியதில் தொடர்புடையவர் என அவர்மீது குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இந்நிலையில், ரையீசி ஈரானின் ஆதீத கடும்போக்காளர் என தெரிவித்த லியோர் ஹையட், அவர்  ஈரானின் அணு திட்டங்களை அதிகரிக்க கூடும் எனவும்  எச்சரித்துள்ளார்.

தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள எப்ராஹீம் ரையீசி, அரசின் மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தப்போவதாகவும், நாட்டில் அனைவருக்குமான தலைவராக இருக்கப்போவதாகவும் உறுதியளித்துள்ளார்.