இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு; குற்றத்தை ஒப்புக்கொண்டார் சாரா

இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே,1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததுதொடர்பான விசாரணை அறிக்கையை கடந்த ஆண்டில் வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

வழக்கு எண் 1000 எனப்படும் மற்றொரு வழக்கில் நேதன்யாகுவின் மனைவி சாரா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், பிரதமருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் சமையல் உள்ளிட்ட பணிகளை செய்ய ஆட்கள் இருந்தும் மக்கள் பணத்தை பயன்படுத்தி, விதவிதமான சுவைமிக்க உணவுகளை பிரபல உணவகங்களில் இருந்து வாங்கி சாப்பிட்டது தொடர்பாகவும் சாரா நேதன்யாகு மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தனது குற்றத்தை சாரா நேதன்யாகு ஒப்புக்கொண்டதாலும், குறைந்தபட்சமான தண்டனை அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாலும் 10 ஆயிரம் ஷெக்கெல் (சுமார் 2800 அமெரிக்க டாலர்கள்) அபராதம் விதித்து ஜெருசலேம் நகர மாஜிஸ்திரேட் அவிட்டால் சென் தீர்ப்பளித்தார்.

மேலும், முறைகேடாக செலவு செய்யப்பட்ட மக்களின் பணமான 45 ஆயிரம் ஷெக்கல்களை அரசு கருவூலத்தில் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.