மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் இலவச உரத்தினை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கமநல சேவைகள் நிலையத்தின் ஊடாக பசளை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றபோதிலும் அவை ஒரு சிலருக்கே வழங்கப்படுவதாகவும் பெருமளவான விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
உரம் பெறுவதற்கு அதிகாலை 1.00மணி முதல் மண்டபத்தடி கமநல சேவைகள் நிலையத்தின் முன்பாக வரிசையில் நிற்பதாகவும் ஆனால் தாங்கள் ஏமாற்றப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உரிய காலத்தில் குறித்த பசளைகள் விசிரா விட்டால் குறித்த விவசாய செய்கையில் பலனில்லையெனவும் விவசாயிகள் நட்டத்தினையே அடையமுடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று காலை மண்டபத்தடி கமநல சேவைகள் நிலையத்தின் முன்பாக பெருமளவு விவசாயிகள் கூடி நின்றதனால் அப்பகுதியில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விவசாயிகள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் நிலையத்தின் உதவி பணிப்பாளர் கி.ஜெகநாதிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த பசளைகள் பெறப்படுவதாகவும் குறைந்தளவு பசளைகளே கிடைத்த நிலையில் அவற்றினை முன்னுரிமை அடிப்படையில் வழங்கியுள்ளதாகவும் குறித்த நிறுவத்தினால் இறக்குமதிசெய்யப்பட்ட பசளையானது துறைமுகத்தில் தேங்கியுள்ளதனால் அவை வெளிவரும் நிலையில் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த திட்டத்தினை முறையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலையுள்ளதாகவும் பசளை கிடைக்கும்பட்சத்தில் அனைவருக்கும் வழங்கப்படும் எனவும் இன்னும் ஓரிரு தினங்களில் இந்த நிலைமை சீராகவும் எனவும் தெரிவித்தார்.