இலங்கை வந்துள்ள மைக்பொம்பியோவிற்கு மன்னிப்புச்சபை கடிதம்

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் குறித்து தீர்வை காணவேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மைக் பொம்பியோவின் இலங்கை பயணத்திற்கு முன்னதாக, சர்வதேச மன்னிப்புச் சபை அவருக்கு எழுதிய கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை தனது கடிதத்தில்,

“இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உடன்படமறுப்பதற்கான விமர்சனங்களை முன்வைப்பதற்கான சூழலும் தளமும் குறைவடைகின்றது.

நியுயோர்க் டைம்சின் பத்திரிகையாளர் தர்சா பஸ்டியன் துன்புறுத்தப்படும் சம்பவம்,புளொக் பதிவாளர் ரம்சி ராசீக் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டமை, ஹெஜாஜ் ஹிஸ்புல்லா தடுத்துவைக்கப்பட்டுள்ளமை, எழுத்தாளர் சக்திக சத்துகுமார தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை போன்ற சம்பவங்கள் இதனை புலப்படுத்தியுள்ளன.

ரம்சி ராசீக் செப்டம்பர் 17ம் திகதி விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவருக்கு எதிரான குற்றவியல் விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன. ஹெஜாஸ் ஹில்புல்லா எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாத நிலையில், அவர் தவறிழைத்தார் என்பதற்கான நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதா தடைச்சட்டத்தின் கீழ் அவர் ஆறு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது சட்டத்தரணியையும் குடும்பத்தவர்களையும் சந்திப்பதற்கு மட்டுப்படுத்தபட்ட அனுமதியே வழங்கப்பட்டுள்ளது. அவரை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான மூன்றாவது தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை தாமதமின்றி விடுதலை செய்யவேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்து பதினொரு வருடங்களாகியுள்ள போதிலும் ஐநாவின் பல விசாரணைகள் மூலம் பதிவு செய்யப்பட்ட பாரிய சர்வதேச மனிதாபிமான மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை இன்னமும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை.

சர்வதேச குற்றங்களுக்கு காரணமானவர்களை பதிலளிக்க செய்யும் நடவடிக்கைகளிலும் இலங்கை ஈடுபடவில்லை.

மிகமுக்கியமான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முடங்கியுள்ளன அல்லது முடிவற்றவையாக காணப்படுகின்றன அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழும் சூழ்நிலை காணப்படுகின்றது.

உதாரணமாக 2006 இல் திருகோணமலையில் இடம்பெற்ற நன்கு அறியப்பட்ட ஐவர் படுகொலை- இந்த படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட 13 பாதுகாப்பு படையினர் போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து 2019 ஜூலை மாதம் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழு பிரகீத் எக்னலிகொட தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் தலையீடு செய்யலாம் என சமீபத்தில் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருந்தது. அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவாகும் நோக்குடன் போட்டியிட்ட 2010 ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக 2010 ஜனவரி 24 ம் திகதி பிரகீத் எக்னலிகொட என்ற கேலிச்சித்திர கலைஞர் காணாமல்போயிருந்தார்.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய இன்னொரு நன்கு அறியப்பட்ட வழக்கில் இந்த வருடம் மார்ச் 26 ம் திகதி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.

இதன் மூலம் பொறுப்புக்கூறலையும் பாதிக்கப்பட்டவருக்கான நீதியையும் அவர் அலட்சியம் செய்திருந்தார். 2000 ம் ஆண்டு மிருசுவில் படுகொலைகள் தொடர்பில் சார்ஜன்ட் ரத்நாயக்கவிற்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இது 8 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பானது.

கொல்லப்பட்டவர்களில் மூவர் 15 வயதிற்கு உட்பட்டவர்கள்,ஐந்து வயது சிறுவனின் உடலில் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டன.

அரசபடையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 வருடகால யுத்தத்திற்கான அடிப்படை பிரச்சினைகளுக்கு மாகாணசபைகளுக்கான அர்த்தபூர்வமான அதிகாரபகிர்வு மூலம் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

ஆயுதமோதல்களின் போது காணாமல்போனவர்களின் உறவினர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இன்னமும் பதில்களுக்காக காத்திருக்கின்றனர்.

தன்னிச்சையாக தடுத்து வைத்திருப்பதை ஊக்குவிக்கும் தடுத்து வைக்கப்படுபவர்கள் சித்திரவதை செய்யப்படுவதை தடுக்கும் ஏற்பாடுகளை நீக்கிய ஆபத்தான பயங்கரவாத தடை சட்டத்தை இலங்கை கையளிக்கவில்லை, யுத்த காலத்தின் போது தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீள ஒப்படைக்கவில்லை.

2009இல் மோதல் முடிவடைந்தது முதல் தமிழ் இனத்தவர்களுடனான உறவுகளில் பதற்றம் நீடிக்கின்றது.

இலங்கை ஜனாதிபதி பிரதமருடனான சந்திப்பின்போது பின்வரும் கரிசனைகளை எழுப்புமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
பின்வரும் விடயங்களை உடனடியாக செய்யுமாறு வலியுறுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை பிரகீத் எக்னலிகொட காணாமல் செய்யப்பட்டமை உட்பட உள்நாட்டு சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என கருதப்படுபவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும்

சார்ஜன்ட் ரத்நாயக்காவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இரத்து செய்ய வேண்டும் என கோரவேண்டும்.
தரிசா பஸ்டியன் உட்பட பத்திரிகையாளர்கள் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும்.

நாட்டின் முஸ்லீம் சமூகத்தினரிற்கு எதிரான பாராபட்சம் மற்றும் வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதுடன் முஸ்லீம் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்தவேண்டும்.

முன்னர் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களான பொதுமக்களிடம் வழங்குவதுடன் இழப்பீடுகளையும் வழங்கவேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.