இலங்கை மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க 3 கோடி தடுப்பூசி தேவை – ரணில்

“இலங்கைக்கு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கு 3 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, இந்த வருடம் 3 கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவருவது சாத்தியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவது குறித்த மருத்துவ ஆலோசனையை அரசாங்கம் பெறவேண்டும் எனவும் விசேட அறிக்கையொன்றில் அவர் வலியுறுத்தியிருக்கின்றார். இந்த அறிக்கையில் அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:.

“கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு இலங்கைக்கு புதிய திட்டம் அவசியம். முதலாவது டோஸ் மருந்தினை பெற்றவர்களிற்கு இரண்டாவது டோஸினை வழங்கவேண்டியது அவசியம். இதற்கான மருந்தினை இலங்கை பெற்றுக்கொள்ளவேண்டும்.

அரசாங்கம் தடுப்பூசிகளை வழங்குகின்றது. ஆனால் அனைத்து மக்களுக்கும் அது கிடைக்கவில்லை. பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் பொது மக்களின் உயிர்களை பலிகொடுக்கவேண்டாம்” என அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். கடந்த நவம்பரில் தடுப்பூசி திட்டத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்திருந்தால் தற்போது தடுப்பூசிக்கு பிரச்சினை வந்திருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.