இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை சகலரும் ஏற்க வேண்டும் – சரத் வீரசேகர

தொல்பொருள் திணைக்களத்தின் தூபி சின்னத்தை மாற்ற முடியாது. ஏனெனில், இலங்கை பௌத்த சிங்கள நாடு. பௌத்த சின்னங்களை அழித்து, அதன் மீது சிவலிங்கம், திரிசூலம் ஆகியவற்றை பிரதிஷ்டை செய்து, அதனை கோவிலாக திரிபுபடுத்துவோர் தண்டிக்கப்பட வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள சியாம் நிகாய பௌத்த வழிபாட்டுக்கு கூட்டமைப்பினர் தடையினை ஏற்படுத்தினால் பாரிய அழிவு ஏற்படும் என ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில்  அவர் மேலும் உரையாற்றியதாவது:

நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. இன்றும் இதன் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கப்பலில் எசிட் இரசாயன பதார்த்தக் கசிவு ஏற்பட்டுள்ளதை மறைத்தே கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல் 2021.05.20ஆம் திகதி முதல் தீ விபத்துக்குள்ளாகி, 2021.06.02ஆம் திகதி கடலில் முழுமையாக மூழ்கியது. இந்த கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரசாயன பதார்த்தங்களினால் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. ஆகவே, ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு கோரி சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்.

அத்தோடு, தொல்பொருள் திணைக்களத்தின் சின்னத்தை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையாக தூபி காணப்படுகிறது. ஏனெனில், இலங்கை ஒரு பௌத்த நாடு. ஆகவே, எக்காரணிகளுக்காகவும் தொல்பொருள் சின்னத்தை மாற்றியமைக்கப் போவதில்லை.

புராதன தொல்பொருள்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு சகல இனங்களுக்கும் உண்டு. இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. ஆகவே, நாட்டு மக்கள் அனைவரும் புராதன தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

பௌத்த சின்னங்களை அழித்து, அதன் மீது சிவலிங்கம், திரிசூலம் ஆகியவற்றை அமைத்து கோயிலை கட்டுவது முறையற்றது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகள் அமைப்பு அப்பாவி தமிழ் மக்களை யுத்த பகடைக்காயாக கொண்டு செயற்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட தமிழ் பிரிவினை அரசியல்வாதிகள் கொழும்பில் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள்.

தமிழ் மக்கள் தொடர்பில் அப்போது கரிசனை கொள்ளவில்லை. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவர்கள் தமிழர்களின் நலன் விரும்பிகள் போல் கருத்துரைக்கிறார்கள்.

சுமந்திரன் உட்பட பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த சின்னங்களை அழிக்க ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, வெறுப்பு பேச்சுக்களை வடக்கில் குறிப்பிட்டுவிட்டு கொழும்பில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற காரணத்தினால் இவ்வாறானவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பிற நாடுகள் இவ்வாறு செயற்பட்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

பௌத்த மதத்தின் மேன்மை பொருந்திய சியாம் நிகாயவின் 270ஆவது வருட  நிறைவு திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி சிறப்பான மத அனுஷ்டானமாக  கொண்டாடப்படவுள்ளது.

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இது முறையற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மத அனுஷ்டானத்துக்கு கூட்டமைப்பினர் தடை ஏற்படுத்தினால் பாரிய அழிவுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதை  கூட்டமைப்பினர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.