இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த 18ம் திகதி இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சேசு (வயது 50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மெர்சியா (30), நாகராஜ் (52), சாம்சன் (28), செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந் நிலையில், நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி, தமிழக மீனவர்களின் படகு மூழ்கியது, இந்த சம்பவத்தில் அதில் இருந்த நான்கு  பேரும் உயிரிழந்தனர்.
அதனைத்தொடர்ந்து மீனவர்களின் உடலை விரைவாக தமிழகம் கொண்டு வர மீனவர்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து தமிழக அரசு, மீனவர்கள் உடலை தமிழகம் கொண்டு வர அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டது.
அதன் அடிப்படையில் நேற்று காலை இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களின் உடல்களையும் இந்திய எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.