இலங்கை ஏதிலிகளுக்கு இந்திய கடவுச்சீட்டு மற்றும் பிற நலத்திட்டங்கள் வழங்கப்படும்: கே.எஸ்.மஸ்தான்

தமிழக – மரக்காணம் முகாமில் வசிக்கும் 48 இலங்கை ஏதிலிகளுக்கு இந்திய கடவுச்சீட்டு மற்றும் பிற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அறிவித்துள்ளார்.

மரக்காணம் கீழ்புதுப்பட்டு கிராமத்தில் ஏதிலிகளுக்கு 440 இலவச வீடுகளை நிர்மாணிக்கும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்ற போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை ஏதிலிகளின் புனர்வாழ்வு முகாமிற்கு மாதாந்த நிதியுதவி வழங்கும் செயல்முறை அடுத்த மாதம் முதல் எளிமைப்படுத்தப்படும்.

இதேவேளை புனர்வாழ்வு முகாம்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெறும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிற நலத்திட்டங்களைப் போன்று அவர்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், தமிழக அரசாங்கத்திடம் இந்த நிகழ்வின்போது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும் தமிழக அரசாங்கம் ஏதிலி முகாம்களுக்கான ‘கியூ’ பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெறவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார் .

குடியுரிமைச் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, திருச்சி மறுவாழ்வு முகாமில் தஞ்சமடைந்த பெண் சமீபத்தில் இந்திய கடவுச்சீட்டை பெற்ற வழக்கை மேற்கோள் காட்டி, ரவிக்குமார், அத்தகைய கடவுச்சீட்டுக்களுக்கான ஏதிலிகளை கண்டறிந்து, அனைவருக்கும் ஆவணங்களை வழங்குமாறும் தமிழக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.