இலங்கையை அச்சுறுத்தம் கொரோனா – நேற்றும் மூன்று மரணங்கள் பதிவாகின

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்றிரவு அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்கனவே 58 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், நேற்று அறிவிக்கப்பட்டுள்ள 3 மரணங்களுடன் இதுவரை 61 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொரட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த, 84 வயதான பெண் ஒருவர், அவரது வீட்டில் நேற்று மரணமடைந்துள்ளார். அவரது மரணத்துக்கான காரணம், நீரிழிவு நோயுடனான கொரோனாத் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – 10, மாளிகாவத்தையைச் சேர்ந்த, 70 வயதான ஆண் ஒருவர், கொரோனாத் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார். அவரது மரணத்துக்கான காரணம், நாட்பட்ட சிறுநீரக நோய், பக்கவாதப் பாதிப்பு மற்றும் கொரோனாத் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த, 75 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார். அவரது மரணத்துக்கான காரணமாக, நீரிழிவு, இருதய நோய் மற்றும் கொரோனாத் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.