Tamil News
Home செய்திகள் இலங்கையூடாக கோவைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல்;பாதுகாப்பு தீவிரம்

இலங்கையூடாக கோவைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல்;பாதுகாப்பு தீவிரம்

இலங்கை ஊடாக ஆறு பயங்கரவாதிகள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிற்குள் ஊருடுவியுள்ளதாக இந்திய புலனாய்வுத் துறைஎச்சரிக்கை விடுத்துள்ளது

தமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா (எல்இடி) தீவிரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி இருப்பதாகவும் ஊடுருவிய ஆறு தீவிரவாதிகளும் கோவையில் முகாம் இட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை தமிழக அரசை எச்சரித்துள்ளது.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி இருக்கும் எச்சரிக்கையில், ”இந்த ஆறு தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். அவர் பெயர் இளையாஸ் அன்வர். அவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த ஆறு தீவிரவாதிகளும் இலங்கை வழியாக தமிழகத்துக்குள் புகுந்துள்ளனர்.

மற்ற 5 பேரும் இலங்கை தமிழ் முஸ்லிம்கள். இவர்கள் தங்களது அடையாளத்தை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் நெற்றியில் திருநீறு அணிந்து, திலகம் இட்டு இருப்பார்கள். தற்போது இவர்கள் 6 பேரும் கோவையில் முகாமிட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கோவையில் முகாமிட்டு இருப்பதாக வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலருக்கு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி கே. பெரியய்யா மேட்டுப்பாளையம் மற்றும் முக்கியப் பகுதிகளில் போலீசார் மேற்கொண்டு வரும் சோதனைகளை பார்வையிட்டார். இவரைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கோவைக்கு விரைந்துள்ளார். அங்கு இவர் முன்னணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கோவையில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை, கேரளா எல்லையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கொண்டு கோவை ரயில் நிலையம், போத்தனூர் ரயில் நிலையம், பீளமேடு ரயில் நிலையம், விமான நிலையம், காந்தி புரம், டவுன் ஹால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, லாட்ஜ்கள், கோயில்கள் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Exit mobile version