இலங்கையில் 15வீதமான பிள்ளைகள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்

இலங்கையில் 15வீதமான பிள்ளைகள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளிக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் கே.புவிராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி பியூச்சமைன்ட் கின்டஹார்டன் முன்பள்ளியின் வருடாந்த உடல்திறனாய்வு நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

பியூச்சமைன்ட் கின்டஹார்டன் முன்பள்ளியின் பணிப்பாளர் எஸ்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளிக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.புவிராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களினால் ஒலிம்பிக்தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

முன்பள்ளி மாணவர்களின் உடல் திறமை மற்றும் அறிவுக்கூர்மையினை அதிகரிக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கைகளுக்கு அமைவாக சிறப்பான முறையில் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

விளையாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதிக்கல்விப்பணிப்பாளர், விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த மருந்தாக பார்க்கப்படுகின்றது. இன்று குழந்தைகளை புரோயிலர் கோழிகள் போன்று வளர்க்கின்றனர்.இந்த நிலைமை நீங்க நாட்டுக் கோழிகள் போன்று திறந்துவிட்டு வளர்ப்பது எதிர்கால சமூகத்திற்கு பலனளிக்கும்.

அண்மையில் சுகாதார அமைச்சு கல்வி அமைச்சுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் 15வீதமான பிள்ளைகள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதேபோன்று 15வீதமான பிள்ளைகள் நீரிழிவு நோய்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.இது மிகவும் கவலைக்குரிய செய்தியாகும்.

எனவேதான் விளையாட்டின் முக்கியத்துவத்தினை பெற்றோர் உணர்ந்து கொள்ளவேண்டும். முன்னைய காலத்தில் விளையாடிய பல விளையாட்டுகள் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி உளவியல் மற்றும் பாட ரீதியான பண்புகளையும் சிறுவர்கள் மத்தியில் வளர்த்தது. அக்காலப்பகுதியில் விளையாட்டுக்களில் முன்பள்ளிக்கல்வியை பெறும் நிலையிருந்தது.அக்காலத்தில் பல விடயங்கள் ஒரு விளையாட்டில் இருந்து.

ஆனால் இன்று காலம்மாற்றமடைந்துள்ளது.விளையாட்டின் ஊடாக உணர்வுகளை கையாலும் திறன்கூட விளையாட்டு மூலம் ஏற்படுகின்றது. இது முக்கியமான ஒரு விடயமாகும். அதற்கான சந்தர்ப்பத்தினை பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்றார்.