“இலங்கையில் பொது வாக்கெடுப்பு வேண்டும் என்ற நிலை வர வேண்டும்“ சீமான்

“இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். அதை ஏற்க சர்வதேச சமூகம், இந்திய நாடு ஏற்க மறுக்கிறது. போர்க்குற்றம் என்ற அளவிலேயே அவை நின்கின்றன. படுகொலை செய்த இனத்துடன் படுகொலை செய்யப்பட்ட இனம் இணைந்து வாழ வாய்ப்பில்லை என்ற கருத்துருவாக்கம் வர வேண்டும், பொது வாக்கெடுப்பு வேண்டும் என்ற நிலை வர வேண்டும்“. என நாம் தமிழர்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் 12ஆம் ஆண்டு நிகழ்வு மே 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி இலங்கை தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வரும் தலைவர்களில் ஒருவரான சீமான், தமது ட்விட்டர் பக்கத்தில் நினைவேந்தல் காணொளியை வெளியிட்டார்.

 அதில்,இலங்கையில் பொது வாக்கெடுப்பு வேண்டும் என்ற நிலை வர வேண்டும்.

ஆனால், அதை உலக நாடுகள் விரும்பவில்லை. குறிப்பாக, இந்தியா துணை கண்டம் பெரிய நாடு அதை விரும்பவில்லை. ஆனால், நாங்கள் எங்கள் தாய்மண்ணான தமிழ்நாட்டில் எங்களுக்கான அரசை நிறுவிய பிறகு இந்தியா எங்களுக்காகப் பேசாமல் தப்பிக்க முடியாது. இந்தியா என்பது மத்தியில் ஆளும் பிரதமர் அல்ல. பல மாநிலங்களின் ஒன்றியம்.

ஆனால், நாங்கள் எங்களுக்கு அதிகாரம் வரும்போது, மேற்கு வங்கம் பேசும், பிகார் பேசும், குஜராத் பேசும், கர்நாடகம், ஆந்திரம், கேரளா என எல்லோரும் பேசுவார்கள். பேசி இனங்களை ஒருங்கிணைப்போம். பஞ்சாபை பேச வைத்து விட்டோம். திரிபுராவை, மணிப்பூரை பேச வைப்போம். எல்லா இனங்களையும் எங்களுக்காக பேச வைத்து இந்திய குரலாக எமக்கான குரலாக ஒலிப்போம். அப்போது சர்வதேச சமூகம் எங்களுடைய குரலை திரும்பிப் பார்க்க வைப்போம் .

நாம் தமிழர் கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு செய்து விட்டோம்.

எந்த நோக்கத்தை கொண்டிருக்கிறாயோ அதற்காக உறுதியாக இரு என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார். யாருக்கோ உழைக்கிறாய் என்ற எண்ணத்தை கைவிடு. என் அன்பிற்குரியவர்கள், நண்பர்கள், உலகம் முழுவதும் உள்ள தாய் தமிழ் உறவுகள், என்னுடன் துணையாக இருங்கள்.

எந்த காலத்திலும் தமிழகத்துக்காகவும் தாய் மண்ணுக்காகவும் சமரசம் செய்ய மாட்டேன் என்பதை பிரபாகரன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். எதற்காகவும் பதவிக்காகவும் அற்ப பணத்துக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என மேலும் தெரிவித்துள்ளார்.