இலங்கையில் கொரோனா பரவலின் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பு-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இலங்கையில் அடுத்து வரும் மூன்று வாரங்களில் கொரோனா பரவலின் மூன்றாம் அலை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளை கண்டுபிடிக்க அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் உடனடி கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை தொற்று அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் தாமதமின்றி விதிக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனல் பெர்னாண்டோ, “தற்போது பல்வேறு வகையான வைரஸ் வகைகள் உலகில் வேகமாக பரவி வருகின்றன, அண்டை நாடான இந்தியா ஏற்கனவே அதிக ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாக உலகளாவிய தொற்று எந்த நேரத்திலும் இலங்கையை பாதிக்கலாம். இதன் காரணமாக, நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அதன்படி, தற்போது ஆபத்தில் உள்ள நாட்டில், கொரோனாவை கட்டுப்படுத்த, அரசியல் தலைவர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவை அவசியம்” என்றார்.