Home ஆய்வுகள் இலங்கையின் தற்கால அரசியல்: ஓர் பார்வை – யே.மேரி வினு

இலங்கையின் தற்கால அரசியல்: ஓர் பார்வை – யே.மேரி வினு

கடந்த 2019 இற்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து புதிய நிர்வாக அமைப்பினரால் இலங்கையில் நடைபெற்று வருகின்ற அரசியல் சார்ந்த நகர்வுகள், செயற்பாடுகளை தற்கால அரசியலாக நோக்கலாம். இலங்கை வளர்ந்து வருகின்ற தென்னாசிய, புவியியல் எல்லைக்குள் உள்ள ஒரு நாடாகக் காணப்படுகின்ற அதேவேளை, உலக அரசியலில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற ஒரு அரசியல் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நாடாகவும் கடந்த காலங்களிலிருந்து பார்க்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் தற்கால அரசியல் நகர்வை பின்வரும் ஐந்து அம்சங்களின் ஊடாக முன்வைக்கலாம். இந்த அடிப்படையில் விரிவாக நோக்குகின்ற பொழுது,

  1. இராணுவ ஆதிக்கவாதம்

இராணுவ ஆதிக்கவாதம், இலங்கையின் தற்கால அரசியலில் முக்கியமான அம்சமாக உள்ளது. நிர்வாக அமைப்பில் இராணுவத்தினர் இணைக்கப்படுகின்றனர். குறிப்பாக, தற்போதைய அரசாங்கத்தில் ஒருவர் பிரதமராகவும், ஒருவர் ஜனாதிபதியாகவும் உள்ள இலங்கையின் மிக முக்கியமான பதவிகள் தற்போது இராணுவத்தினர் வசமாகி உள்ளதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னாள் இராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் பதவிக்கு வந்த பின் அவருக்குக் கீழ் உள்ள பதவிகளுக்கு இராணுவத்தினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சுகாதார அமைச்சின் முக்கிய பதவியான செயலாளர் பதவிக்கு இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வகையில் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க பொறுப்பிலுள்ளார். அதுமாத்திரமன்றி, ஓய்வூபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.கே.எஸ்.பெரேரா, மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பிலுள்ளார். அத்துடன் இராணுவத் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிகள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வுத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஜனாதிபதி இராணுவத்தில் இருந்த காலகட்டத்தில் கஜபாகு படையணியில் கடமையாற்றிய ஆறு ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்களை அவர் தனது அணிக்குள் உள்வாங்கியுள்ளார்.

குற்றச்சாட்டுக்களைக் கொண்டிருக்கும் பல இராணுவத்தினர் இவ்வாறு பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்சவின் கீழ் பணியாற்றிய 14 இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் உத்தியோகபூர்வ பதவிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் எனும் அமைப்பு தெரிவிக்கின்றது. இந்த நிலையில், இலங்கையானது, தற்போது இராணுவ அதிகாரிகள் கூட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்ற அரசியல் போக்கினைக் கொண்டுள்ளதென அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது. அத்துடன் இலங்கை அரசின் தற்போதைய நிர்வாக அமைப்பில் நியமனம் செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் என பின்வருவோரை குறித்த அமைப்பு இனங்காட்டியுள்ளது.

  1. லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா
  2. மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே
  3. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
  4. மேஜர் ஜெனரல் கருணாரத்ன பண்டா எகொடவல
  5. மேஜர் ஜெனரல் கே. ஜகத் அல்விஸ்
  6. மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க
  7. மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராட்ச்சி
  8. மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா
  9. மேஜர் ஜெனரல் விஜித்த ரவிபிரிய
  10. மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்ச்சி
  11. பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க
  12. பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ
  13. பிரிகேடியர் துவான் சுரேஷ் சலே
  14. எட்மிரல் ஜயநாத் கொலம்பகே
  15. உதவி போலிஸ் அத்தியட்சகர் பிரியந்த டி அல்விஸ்

இவர்களைத் தவிர, மேலும் பலர் அரச நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. பல அரச நிறுவனங்களில் சிவில் அதிகாரிகள் இருக்க வேண்டிய இடங்களில், படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நாடாளுமன்றத்தை முடக்கி, ஜனநாயக அரசியல் ஓட்டத்தைத் தடுத்து, தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதனையும் இராணுவ மயமாக்கலுக்குள் இலங்கையின் சமகால அரசியல் செல்வதனையும் அறுதியிட்டுச் சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக :- 01

Capture.JPG 1 7 இலங்கையின் தற்கால அரசியல்: ஓர் பார்வை - யே.மேரி வினு

  1. குடும்ப ஆட்சி ( ராஜபக்சமயம்)

குடும்ப ஆட்சி இலங்கையின் சமகால அரசியலில் மிக முக்கியமான அம்சம். இலங்கை ‘ராஜபக்சமயம்’ என்று தற்போது கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தாரின் குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் மேலோங்கி வருவதனைக் காணலாம். குறிப்பாக 2009இல் கிடைத்த யுத்த வெற்றியின் விளைவாக ராஜபக்ச குடும்பத்தார் தென்னிலங்கை அரசியலில் விரும்பப்பட்டனர். அதிலும் குறிப்பாக ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும், இலங்கையில் இருந்த காலத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். பின்னர் 2019இல் ஏற்பட்ட பெரும் தோல்விக்குப் பிறகு ராஜபக்சவின் குடும்ப ஆட்சி முழுமையாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதெனலாம். அத்துடன் அரசியல் குடும்பங்களின் ஆதிக்கம் இலங்கை அரசியலில் புதிய விடயம் இல்லை என்றாலும், தற்போதைய இலங்கையில் எங்கு திரும்பினாலும் ராஜபக்ச குடும்பம்தான் என்கின்ற ஒரு நிலை காணப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பெறப்பட்ட யுத்த வெற்றி, சிங்களப் பெரும்பான்மை சமூகத்தினரிடையே ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கை உயர்த்திப் பிடிப்பதாக அமைந்திருந்தது. இந்தப் பின்னணியிலேயே ‘ராஜபக்சமயம்’ நுழைந்தது. முக்கியமாக தற்போது தென்னிலங்கையில் எங்கு திரும்பினாலும் ராஜபக்ச குடும்பத்தாரின் சுவரொட்டிகளைத்தான் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. “ஜனாதிபதியின் சகோதரர்கள், மகன்கள், அத்தைகள், உற்றார் என்று எல்லோரும் அவர்களாகவே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். வேறு யாரும் அரசியலில் முன்னுக்கு வருவதற்கு அவர்கள் இடம் தருவதே இல்லை.” என்று பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு தற்போதைய இலங்கையின் அரசியலில் குடும்ப ஆட்சி மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது.

  1. ஒடுக்குமுறைச் சிந்தனை

ஒடுக்குமுறைச் சிந்தனை என்ற வகையில், இலங்கையின் தற்போதைய அரசியலை நோக்குகையில், இலங்கையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இன ரீதியான, மத ரீதியான ஒடுக்குமுறைகள் தற்போதைய அரசியலில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. சிறுபான்மை இனங்களைக் குறிவைத்து ஒடுக்குமுறை நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக சிறுபான்மையினரின் வாய்ப்புகள், உரிமைகள், அனுபவிப்புகள் போன்றவற்றில் திருப்தியின்மை ஏற்படுத்தப்படுகிறது. ஜனநாயகப் போர்வை அணிந்த பெரும்பான்மை சிங்களப் பேரினவாத அரசால் நன்கு திட்டமிட்ட வகையில் ஒடுக்குமுறைச் சிந்தனைகள் இலங்கையில் தூவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எடுத்துக்காட்டு -01

புர்க்கா ஒடுக்குமுறையைச் சொல்லலாம். முஸ்லிம்களின் ஆடைக் கலாச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட தடை சிறுபான்மை முஸ்லிம்களை இலங்கை அரசியலில் பெரும் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளது. அவர்களது மதப் பாரம்பரிய நம்பிக்கை மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுபான்மை முஸ்லிம் அமைச்சர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலமாகக் கைது செய்யப்பட்டமை போன்றவற்றை கூறலாம். இவை மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைக் கொண்டு தற்கால அரசியல் நிர்வாகத்தினரால் பலவந்தமாக முன்னெடுக்கப்பட்டு வருவதைக் காணலாம்.

எடுத்துக்காட்டு-02

தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக தற்போது நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நில ஆக்கிரமிப்பு மற்றும் மகாவலி அபிவிருத்தி ஊடான ஆக்கிரமிப்புப் போன்றன பலவந்தமாக முன்னெடுக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகள் எனலாம். சிறுபான்மை இன மக்களின் பிரதேசங்களில் திட்டமிட்டுக் குடியேற்றங்கள் நடைமுறைப்படுத்துதல், மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் மூலமாக சிறுபான்மையினர் பிரதேசங்களில் மதத் தலங்களை நிறுவுதல் போன்ற அரசியல் நகர்வுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவையெல்லாம் சிறுபான்மை மக்களை புறமொதுக்கல் செய்கின்றன.

எடுத்துக்காட்டு-03

யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் கடந்தும், வடக்கு கிழக்கு பிராந்தியத்திலுள்ள மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பல முறை பேரணிகள் நடத்தப்பட்டு, அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கத்தில் சிறந்த அரசியல் தீர்வு இன்னும் முன்னெடுக்கப்படவில்லை. கடந்த யுத்தத்தின் போது ஜனாதிபதியாக இருந்தவர் தற்போதைய அரசியல் நிர்வாகத்தில் பிரதமராக இருக்கையில், மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கைகள் மறைமுகமாக முன்னெடுக்கப்படுவதாக பலரும் விமர்சனம் செய்து வருவதனைக் காணலாம். ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான பதவியேற்பு நிகழ்வு உரையில் “நான் சிறுபான்மையினர் வாக்குகளால் ஜனாதிபதி ஆகவில்லை” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தமையானது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

இவ்வாறு ஒடுக்குமுறைச் சிந்தனைகள் தற்போதைய அரசியல் நிர்வாகத்தினரால் பலவந்தமாக முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் ஆயிரம் பேர் வேலைவாய்ப்புத் திட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இவ்வாறு ஒரு அநாகரீகமான பழிவாங்கல் ஒடுக்கல் தற்போதைய அரசியல் நிர்வாகத்தினரால் பலவந்தமாக ஏற்படுத்தப்படுகின்றது எனலாம்.

தொடரும்….

யே.மேரி வினு

4ம் வருடம்

சமூகவியல் துறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Exit mobile version