இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை; இணை அனுசரணை நாடுகள்

இலங்கையின் உள்நாட்டு நல்லிணக்க செயல்பாடுகளில் நம்பிக்கையில்லை என ஜெனீவா தீர்மானத்துக்கு பிரதான அனுசரனை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 45அமர்வில் ஜெனீவா தீர்மானத்துக்கு பிரதான அனுசரனை வழங்கிய நாடுகள் இதனை தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது உரையில் இலங்கை குறித்து வெளியிட்ட கரிசனைகளை கருத்தில் எடுத்துள்ளதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

கனடா ஜேர்மனி பிரித்தானியா வடக்கு மசெடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகளின் சார்பில் உரையாற்றிய பிரிட்டனின் மனித உரிமை விவகாரங்களுக்கான தூதுவர் ரீட்டா பிரென்ஞ் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த மார்ச் அமர்வில் இலங்கை தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை பேரவை ஆராயும் என அவர் தெரிவித்துள்ளார். 2015 ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மனித உரிமை பேரவை ஆராயும் என ரீட்டா பிரென்ஞ் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தீர்மானத்தின் மூலம் இலங்கை கடந்தகால காயங்களை ஆற்றுவதற்கும் மனித உரிமை ஆணையாளரினால் பதிவு செய்யப்பட்ட தீர்வு காணப்படாத பாரிய உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கு தீர்வை காண்பதற்குமான கருத்துடன்பாட்டுடனான கட்டமைப்பை ஜெனீவா தீர்மானம் மூலம் மனித உரிமை பேரவை உருவாக்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கட்டமைப்பு கருத்துடன்பாட்டுடனும் இலங்கையின் முழுமையான ஆதரவுடனும் பேரவையால் இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டது என ரீட்டா பிரென்ஞ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் அந்த தீர்மானத்தை தொடர்ந்தும் ஆதரிக்கவில்லை என தெளிவாக பேரவைக்கு தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள ரீட்டா பிரென்ஞ் இது குறித்து ஜெனீவா தீர்மானத்துக்கு பிரதான ஆதரவை வழங்கிய நாடுகள் மீண்டும் ஏமாற்றத்தை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் நாட்டின் பல்வேறுபட்ட சமூகத்தினர் மத்தியில் நல்லிணக்கம் சமாதான சகவாழ்வு நீதிஆகியவற்றினை ஏற்படுத்துவதற்கான தனது தொடரும் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் புதிய உள்நாட்டு பொறிமுறையொன்று இந்த நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கும் என குறிப்பிட்டுள்ளது.

நாங்கள் இந்த அர்ப்பணிப்பை பாராட்டும் அதேவேளை கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்ட அவ்வாறன உள்நாட்டு நடவடிக்கைகள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் மற்றும்உண்மையாள நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் கவலை தரும் விதத்தில் போததான்மை கொண்டவையாக காணப்பட்டுள்ளன எனவும் ரீட்டா பிரென்ஞ் தெரிவித்துள்ளார்.