இலங்கையின் இறைமையை சமரசத்திற்கு உள்ளாக்குகிறார்கள்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்மக்களிற்கு தன்னாட்சி வழங்குவதற்கான இடைக்கால ஏற்பாட்டைக்கூட எதிர்த்தவர்கள்தான் இன்று நாட்டின் இறைமையை சமரசத்திற்கு உள்ளாக்குகிறார்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் துறைமுகநகர சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்,

“பெரும்பாலான எதிர்கட்சி உறுப்பினர்களைப்போலன்றி நாம் இச்சட்டமூலத்தை வேறு விதமாகவே அணுகுகிறோம். எங்களது பார்வையில் ஒரு சிறியநாடாகவுள்ள இலங்கை சர்வதேசஅளவிலான பொருண்மியப் போட்டிகளை எதிர்கொள்வதானால் புதுமையான வழிமுறைகளைக் கண்டறிவதுபற்றிச் சிந்திக்க வேண்டிள்ளது.

குறிப்பாக கொரோணா பெருந்தொற்று காரணமாக உலகளவில் பொருண்மிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிற நிலையில், பொருண்மியப் போட்டியை எதிர்கொள்வதற்கு இலங்கை அதிகளவில் செயற்பட வேண்டியுள்ளது.

அந்தவகையில் பார்க்கிறபோது, சிறப்பு பொருண்மிய வலயங்களை அல்லது வேறேதாவது பெயரில் அழைக்கப்பட்டாலும் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்வது பற்றிச் சிந்திப்பதற்கு அல்லது இத்தகைய புதுமையான அணுகுமுறைகளை கையாள்வதற்கும், அதற்கான செயற்படு வெளியினை உருவாக்குவதற்கும் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதனையோ அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவேண்டிய சட்ட மூலங்களைக் கொண்டுவருவதனையோ ஏன் ஒப்பங்கோடல் முறையிலான பொது வாக்கெடுப்புக்குச் செல்வதனையோ தவறெனக் கூறமுடியாது.

ஒற்றையாட்சி அரசியலமைப்பானது எழுபத்திமூன்று வருடங்கள் பழமையானது, இப்போதிற்கும் அரசியலமைப்பில் நீங்கள் இருபது முறை திருத்தங்களைச் செய்துள்ளீர்கள். பிரச்சனை அதிகரித்துச் செல்கிறது. நாட்டிற்குள் பிளவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இனங்களுக்கிடையில் பிளவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இது செயற்பாட்டுக்கு உதவாத அரசிலமைப்பாக மாறிவிட்டது. தனித்து இனத்துவ உணர்வுகளின் அடிப்படையிலேயே இன்றும் இது நடைமுறையிலிருக்கிறது. அதிகாரத்தை இவ்வாறு மத்தியில் குவிப்பதில் எதுவித அர்த்தமுமில்லை.

அந்த வகையில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்குவகையில் தனி அலகாக துறை முக நகரத்தை உருவாக்குவது, தொழில் வாய்ப்புகள், தொழிற்பயிச்சிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பொருண்மிய மேம்பாட்டினை ஏற்படுத்துவதற்கு அதனை பரிசீலிப்பது போன்றவை தவறான அணுகுமுறை எனக் கூறமுடியாது. இவ்விடயங்களில் நாட்டின் ஏனைய பகுதிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் அதன் அவசியத்தை உணரக்கூடியதாக இருக்கிறது. நாங்கள் இச்சட்டமூலத்தை எதிர்க்கிறோம்.

பொருண்மிய மேமபாடடை ஏற்படுத்துவதான் இங்கு முதன்மையான விடயமாக இருப்பின் அக்குறிக்கோளில் எதுவித தவறும் இல்லை. அதற்காக நாம் இச்சட்டமூலத்தை எதிரக்கவில்லை.

சில காலமாக எமது அரசியல் கட்சியானது இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பு செயற்படமுடியாதவாறு முடக்கமடைந்து விட்டதாக கூறிவருகிறது. இன்றைய யுகத்திற்கு இது பொருந்தாது எனவும் நாம் கூறிவருகிறோம்.

நாட்டின் இறைமை என அரசாங்கமும் ஏன் எதிர்க்கட்சியும் கூறிவருவதனை நாம் ஏற்கவில்லை. முதன்மையான எதிர்கட்சியானது இந்த விடயத்தில் அரசாங்கத்தை விஞ்சுகிறபடி பேசிவருகிறது. இறைமை என்ற அடிப்படையில் நீங்கள் கடைப்பிடித்து வருவது காலவதியாகிவிட்ட கருதுகோள். உலக பொருளாதார விடயத்தில் ஒரு தரப்பாக இருக்க விரும்பும் நீஙகள் உள்நாட்டில் இவ்வாறு நடந்துகொள்ள முடியாது. இவ்விடயம் தொடர்பாக புதிதாகச் சிந்திக்க வேண்டும். இவ்வரசியல் யாப்பு தொடர்பாக புதிதாச் சிந்திக்க வேண்டும்.

இந்த யுகத்திற்கு ஏற்றவிதத்தில் அரசியலமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த எத்தனிப்பதனை நாங்கள் வரவேற்போம். ஆகவே இச்சட்டமூலம் கொண்டுவருவது தொடர்பாக அரசாங்கம் உத்தியோகபூர்வமான முறையில் குறிப்பிடுகின்ற விடயங்களுக்காக நாங்கள் இச்சட்டமூலத்தை எதிர்க்கவில்லை என்பதனை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

உண்மை என்னவென்றால், இன்றைய உலகில், இலவசமாக யாரும் மதிய உணவினை வழங்குவதில்லை. முன்னைய மகிந்த இராஜபக்சவின் அரசாங்கத்தினைப்போலவே இந்த அரசாங்கமும், பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து வெளியியேறிய பின்னர் இருந்துவரும் புவிசார் அரசியல் சமநிலையை குழப்புவதனையே தமது குறிக்கோளாக் கொண்டிருக்கும் முக்கிய தரப்பாக இருந்துவருகிறது.

மகிந்த இராஜபக்ச அரசாங்கம் போலவே கோத்தாபாய இராஜபக்ச அரசாங்கமும் சீனாவின் பக்கம் சாய்ந்தாகவே செயற்பட்டுவருகிறது. அவர்கள் சீனாவின் பக்கம் வலுவாகச் சார்ந்தவர்களாக இருப்பதனால், இந்த நாட்டின் பொருண்மியத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நல்ல செயற்திட்டங்களை

இந்த நாட்டின் அமைவிடம் காரணமாகவுள்ள புவிசார் அரசியல் நலன்களை வைத்து சீனாவிற்கு சாதகமாக சமரசத்திற்கு உட்படுத்துகிற பணியிலேயே ஈடுபடுகின்றனர்.

ஜேஆர் ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில், அவர் ஐக்கிய அமெரிக்காவின் பக்கம் சார்ந்து செயற்பட்டபோது இதுபோன்ற புவிசார் அரசியல் போட்டி ஏற்பட்டது. இலங்கை மேலும்மேலும் ஐக்கிய அமெரிக்காவின் பக்கம் சரியாமல் தடுப்பதற்கு எமது அண்டைநாடான இந்தியா ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கும் சென்றது.

பனிப்போர் காலத்தில், இலங்கை அமெரிக்க சார்பாக சென்றுவிடாமல் தடுப்தற்கு தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்தை இந்தியா தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியது. அதுவே உண்மை நிலவரம். இன்று இப்பிராந்தியத்தில் காணப்படும் வலுச்சமநிலையை தன்பக்கத்திற்குச் சார்பாகத் திருப்ப முனையும் ஒரு தரப்பான சீனாவை இந்த நாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

புவிசார் அரசியலை மையப்படுத்திய உங்களது களியாட்ட நடவடிக்கைகளால் தமிழர் தேசமே அதிகம் பாதிக்கப்பட்டது. உங்களுடைய புவிசார் அரசியல் extravaganza ஆல் தமிழர்தேசமே பாதிக்கப்பட்டது. இவ்வாறான நிலமை திரும்பவும் ஏற்படுவதனை நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இவ்விடயத்தில் ஒரு தரப்பாக இருப்பதனை நாங்கள் விரும்பவில்லை. அதன் காரணமாகவே நாங்கள் இச்சட்மூலத்தை எதிர்க்கிறோம்.

இன்னுமொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்விரும்புகிறேன். இதுதான் இங்குள்ள சோகநிலை, இதுதான் இனவாதம், இந்த அவையிலுள்ள பெருமபாலான உறுப்பினர்கள் இதனையே விரும்புகிறார்கள்.

அமைதிப் பேச்சுவார்த்தை உச்சநிலையில் இருந்தபோது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு நிலப்ரப்பை அதன் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தபோது, மேற்கொண்டு பேச்சுவார்த்தையை தொடரும் வகையில் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை பற்றிய யோசனை முன்வகைக்கப்பட்டது. அப்போதைய அரசாங்கம் கூட்டாட்சி முறையைக் கொண்டுவருவதுபற்றிச் சிந்திப்பதாக உத்தியோகபூர்வமான முறையில் அறிவித்திருத்திருந்தது

இந்தகைய புறச்சூழலிற்தான் விடுதலைப்புலிகள் இவ்வாலோசனையினை முன்வைத்திருந்தனர். ஆனால் அதனை நீங்கள் நிராகரித்திருந்தீர்கள். ஒரு இடைக்கால ஏற்பட்டினைக்கூட நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்மக்கள் ஏதோ ஒருவகையில் தன்னாட்சி அலகினைப் பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்கு இனவழிப்புச் செய்வதனை தேரந்தெடுத்தீர்கள. ஆனால் இன்றைக்கு வேறுகாரணங்களுக்காக அதுபோன்ற ஒரு அலகினை உருவாக்குவது தொடர்பில் உங்களிடம் எதுவித தயக்கமும் காணப்படவில்லை.

புவிசார் அரசியலில் போட்டித்தரப்புகளில் ஒரு தரப்பினர் மேலாதிக்கம் பெறுவதற்கு வழிவகை செய்யும் வகையில் இதனை மேற்கொள்கிறீர்கள். இதுதான் இந்த அவையின் இனவாதம். இதன்காரணமாகவே நாங்கள் இந்தச் சட்டமூலத்தை எதிர்க்கிறோம். இக் கெடுவாய்ப்பான நிலமையை சிங்கமக்கள் உணர்ந்துகொள்வார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்”. என்றார்.