Tamil News
Home செய்திகள் இறுதிப்போரின் போது சரணடைந்தவர்களை கொன்றுவிட்டதாக கோட்டாபய சொன்னார் – அம்பலப்படுத்துகின்றார் ஸ்டீபன் ரப்

இறுதிப்போரின் போது சரணடைந்தவர்களை கொன்றுவிட்டதாக கோட்டாபய சொன்னார் – அம்பலப்படுத்துகின்றார் ஸ்டீபன் ரப்

“கடந்த காலங்களில் பொறுப்புக்கூறலிற்கு என்ன நடந்தது என ஆராய்வதற்காக ஆணைக் குழுவொன்றை சிறீலங்கா அரசாங்கம் நியமித்துள்ளதாக அறிகின்றோம். இது கதவை மூடுவதற்கான இன்னொரு முயற்சி. நீதியை தடுப்பதற்கான இன்னொரு முயற்சி” என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களிற்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார்

 உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம், இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை, கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து முன்னெடுத்த இணையவழி கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

  “இதுதொடர்பில் நான் இலங்கைக்கு 2012இல் மேற்கொண்ட விஜயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

 முதலாவதாக சகமனிதர்கள் என்ற அடிப்படையில் உலகத்தின் அனைத்து பகுதியிலும் மனித உரிமைகளை சர்வதேச மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான கடப்பாடு எங்களுக்கு உள்ளது. இதில் பாரிய மனித உரிமை மீறல்களுக்கான உண்மை மற்றும் நீதிக்கான உரிமையும் உள்ளது.

 அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த இப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இது குறித்துப் பேசியமை எனக்கு நினைவில் இருக்கின்றது. “குற்றங்களை இழைத்த தனிநபர்களுக்கு எதிராக நம்பத்தகுந்த சாட்சியங்கள் இருந்தால் மீறல்களுக்காக அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கலாம். அதற்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கின்றோம்” என்றேன். ஆனால் சரணடைந்த பின்னர் அத்தகையோர் – அவர்கள் அறுபது பேர் வரை – அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் – கொல்லப்பட்டு விட்டனர். எனவே யுத்தக் களத்தில் இருந்த – குற்றம் சுமத்தப்படக்கூடிய சந்தேக நபர்கள் – உயிருடன் இல்லை. எனக்கு நினைவிருக்கின்றது பாதுகாப்புச் செயலாளர் கூறினார். “விசாரணை, விசாரணை என்று நீண்ட காலம் இழுபடும், சம்பந்தப்பட்டோர் தப்பி விடுவர்” என்றார். “அதனால் நான் அவர்களைக் கொன்றேன்; நான் அவர்களைக் கொன்றேன்; நான் அவர்களைக் கொன்றேன்” என்றார் பாதுகாப்புச் செயலாளர். ஆனால் இது நீதி முறைமையே அல்ல.

 நான் முல்லைத்தீவிற்கு சென்ற அன்று பெண்கள் குழுவொன்று காணமல் போன தங்கள் பிள்ளைகளின் படங்களை காண்பித்தார்கள். அவர்களின் பிள்ளைகள் விடுதலைப்புலிகளின் ஒரு பகுதியாக காணப்பட்டவர்கள். பலவந்தமாக சிறுவர் படையணிகளில் சேர்க்கப்பட்டவர்கள். அவர்களில் அனேகமானவர்களை மேமாதத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பார்த்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் காணாமல் போனதாக அந்த பெண்கள் தெரிவித்தனர்.

நான் அந்த விடயத்தில் அக்கறை காட்டுவதாக என்ன நடந்தது என தெரிவிப்பதாக தெரிவித்தேன். அதற்கு சில நாட்களின் பின்னர் அவர்கள் பாதுகாப்பு படையினரால் துன்புறுத்தப்பட்டதாக அறிந்தேன். அவர்களை சிறையில் அடைக்கப்போவதாக அச்சுறுத்தியதாகவும் அறிந்தேன். அதற்கு பதிலளித்த அந்த தாய்மார்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் குறித்த தகவலை எங்களால் பெறமுடியாது என்றால் எங்களை கொலை செய்யுங்கள். அதன் பின்னர் வாழ்வதில் அர்த்தமில்லை எங்களை கொலை செய்யுங்கள் என அவர்கள் தெரிவித்ததாக எனக்கு மொழிபெயர்ப்பில் உதவியவர் தெரிவித்தார்.

இரண்டாவது பிரச்சினை எதிர்காலத்தில் மேலும் வன்முறைகள் தொடர்வது தொடர்பானது. மேலும் குற்றங்கள் தொடர்பானது. தேசிய அதிகாரிகளை தங்கள் கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்துவதே மூன்று வருடங்களாக எங்கள் நோக்கமாக காணப்பட்டது- அமெரிக்காவின் தந்திரோபாயமாக காணப்பட்டது. நாங்கள் இதிலிருந்து நகரவேண்டும், அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தவேண்டும் – அது தேசத்தின் வீரர்களை தனிமைப்படுத்தும் என தெரிவிக்கப்படுவதை நான் செவிமடுத்துள்ளேன். இந்த விடயங்கள் மிகவும் கடினமானவை என சொல்லப்படுவதை செவிமடுத்துள்ளேன்.

வன்முறைகள் தொடர்கின்றன என்பதை நான் அவர்களுக்கு சுட்டிக் காட்டினேன். அவை முன்னர் காணப்பட்ட வன்முறைகளாகயிருக்கலாம் ஆனால் ஆட்கள் கடத்தப்பட்டார்கள், குற்றங்கள் ஊழல்கள் காணப்பட்டன. முன்னர் இடம்பெற்ற சம்பவங்களுடன் வன்முறைகளுடன் தொடர்புடைய அதே ஆட்கள் இந்த குற்றங்களில் ஈடுபட்டனர். தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவது ஒரு தொற்றுநோய் போல காணப்பட்டது. அப்பாவிகளை கொலை செய்தால் நீங்கள் தண்டனையிலிருந்து தப்பலாம். சரணடைந்தவர்களை கொலை செய்தால் தப்பலாம் என்பதே இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்ற செய்தியாக காணப்பட்டது.

இலங்கையின் ஆணைக்குழுக்களால் நிருபிக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் கூட தண்டனையிலிருந்து விடுபடலாம் என்ற நிலை காணப்பட்டது. கடந்த சில வருடங்களாக முக்கியமான சம்பவங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்றதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். இவை முடிவடைந்த நேரடி யுத்தத்துடன் தொடர்புபட்டவையில்லை. என்னால்  திருகோணமலையில் 11 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தினை நினைவுகூரமுடியும். 11 அப்பாவி பாடசாலை மாணவர்கள் மோதல்களுடன் தொடர்பில்லாதவர்கள் கடத்திகொல்லப்பட்டனர். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இது இடம்பெற்றது- இது அரசியலுடன் தொடர்புடையது இல்லை- அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை- அவர்கள் வேறு இனத்தை சேர்ந்தவர்கள் பல அதிகாரிகளால் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்- கப்பம்பெறும் நோக்கத்துடனேயே இது இடம்பெற்றது. அவர்களை கொலை செய்து பெற்றோரிடமிருந்து பணத்தை பெறுவது அவர்களின் நோக்கமாக காணப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு தடைகளையும் மீறி கடும் முயற்சிகள் இடம்பெற்றன. பல அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் ஏனைய சம்பவங்களிற்கு நீதியை வழங்கும் நடவடிக்கைகள் தடுக்கப்படுவதை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழு என்பது உண்மையில் நீதியில் குறுக்கீடு செய்வதற்கான ஆணைக்குழு. அந்த ஆணைக்குழுவின் தலைவர் அப்பாவி இளைஞர்களை கடத்தி கொலை செய்வதவர்களை விசாரணைசெய்வதை தடுத்து வருகின்றார்.அவரே தற்போது காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவராக காணப்படுகின்றார். இது சட்டத்தின் ஆட்சியை பதிலளிக்கும் கடப்பாடு என்ற எண்ணக் கருவை மீறும் செயல். இந்த காரணத்திற்காகவே நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் செயற்பட வேண்டும்..

பரணகம ஆணைக்குழு சரணடைந்தவர்கள் வெள்ளைகொடியுடன் வந்தவர்கள் குறித்து பேசியது 12 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டது குறித்து பேசியது. நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் காணப்படுவதை கண்டுபிடித்தது. ஆனால் அதன் பின்னர் நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. தற்போது அரசாங்கம் ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை தவிர்ப்பதற்காக கடந்தகாலங்களில் பொறுப்புக் கூறலிற்கு என்ன நடந்தது என ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இது கதவை மூடுவதற்கான இன்னொரு முயற்சி. நீதியை குழப்புவதற்கு குறுக்கிடுவதற்கான இன்னொரு முயற்சி.

பத்துவருடங்கள் காத்திருந்த பின்னர் அனைத்தும் போதும் கதவுகளை மூடுங்கள் அவர்கள் தங்கள் வேலைகளை பார்க்கட்டும் என்பது இலங்கை தொடர்பான செயற்பாடுகளில் இருந்து தெரிவிக்கப்படும் செய்தியாகயிருந்தால் ஏனைய நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது எதனை தெரிவிக்கின்றது. மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவது பின்பற்றுவது தொடர்பான விடயங்களின் எதிர்கால இது தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலின் தொற்று நோயாக காணப்படாது ஆட்கொல்லி நோயாக மாறும். இலங்கை மக்களின் உண்மை மற்றும் நீதிக்காக போராட வேண்டிய கடப்பாட்டை அனைவரும் பற்றிக்கொள்ளாவிட்டால் உலகம் எதிர் கொள்ளப் போகின்ற ஆபத்து இதுதான்.

Exit mobile version