Tamil News
Home செய்திகள் இராணுவச் சோதனைச் சாவடியால் மக்களுக்கு அசௌகரியம் – செல்வம் எடுத்துரைப்பு

இராணுவச் சோதனைச் சாவடியால் மக்களுக்கு அசௌகரியம் – செல்வம் எடுத்துரைப்பு

மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் நடைக்கலநாதன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றதுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம், மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேலின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

இதில், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.திலீபன், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், பிரதேசச் செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், பாதுக்காப்புப் படை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, குடி நீர், விவசாயம், கடற்தொழில், கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதேவேளை, மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியினால் மக்கள், அரச பணியாளர்கள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரியப்படுத்தினார்.

அதாவது, “சோதனைச் சாவடிகள் உள்ளமை தொடர்பாக எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை. ஆனால், குறித்த சோதனைச் சாவடி அமைந்துள்ள பகுதியே ஒரு பிரச்சினையாக உள்ளது. மக்களின் பொழுது போக்கு இடமாகக் காணப்பட்ட குறித்த இடத்தில் இராணுவச் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இதானால், மக்கள் அவ்விடத்திற்குச் செல்லமுடியாத நிலை காணப்படுகிறது.

மேலும், அரச கடமைகளுக்காகச் செல்லும் பணியாளர்கள் குறித்த சோதனைச் சாவடியில் நிறுத்தப்படுகின்றனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் கழற்றப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இதனால், அவர்கள் உரிய நேரத்திற்கு கடமைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Exit mobile version