இன அடிப்படையில் அரசு செயற்படுகின்றது; நாடாளுமன்றில் ரிஷாட் குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும் போது, அது இனரீதியாக செயற்படுவதாகவே தோன்றுகின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு:-

‘இரண்டு வருடங்களுக்கு முன்னர் வவுனியா அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர், மன்னார் அரசாங்க அதிபராக இருந்த முஸ்லிம் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், வவுனியாவில் முஸ்லிம் ஒருவருக்கு இந்தப்பதவி வழங்கப்பட்டது. மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்த மாவட்டத்தில் பணி புரிந்த
இஸ்லாமியர் திடீரென இடமாற்றப்பட்டமை ஏன்? இவர் செய்த குற்றம்தான் என்ன? இல்லாவிடின் முஸ்லிம் என்ற காரணத்துக்காகவா இவ்வாறு நடத்தது?

பல்லின மக்கள் வாழும் நாடு என்று எம்மைப்பற்றி வெளிநாடுகளில் பெருமையாக பேசும் நீங்கள் இந்த நாட்டிலே அதனை செயலில் காட்டுகின்றீர்களா?

அரச அதிபரை அவசரமாக இடமாற்றியதை நீங்கள் சாதனையாக கருதுகின்றீர்களா? திருமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிள் முஸ்லிம் சமூகம் பெருவாரியாக வாழ்கின்றது. இலங்கை நிர்வாக சேவையில் தகுதி பெற்ற சுமார் இருபதுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

வீதாசாரப்படி மூன்று பேர் நியமிக்கப்படவேண்டும். ஆகக் குறைந்தது அம்பாறை மற்றும் திருமலையிலாவது முஸ்லிம் அரச அதிபர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக இருந்த வரையும் இடமாற்றி இருப்பது நியாயமா?’ எனக் கேள்வி எழுப்பினார் அவர்.