இனி அணு ஒப்பந்த கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்படியப்போவதில்லை- ஈரான்

P5+1 எனப்படும் உலக சக்திகள், அதாவது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஒரு அணு ஒப்பந்தத்தை 2015ல் இரான் ஏற்றுக்கொண்டது.

அந்த ஒப்பந்தத்தில், இரான் அதனுடைய அணு நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டினுள் அனுமதிப்பதாகவும் அதற்குப் பதில் இரான் மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரான் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், யுரேனிய செறிவூட்டல் திறனை தாங்கள் குறைத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறி உள்ளது.தெஹ்ரானின் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது இரான் அரசு.

இரானின் சக்திமிக்க புரட்சிகர காவல் படையின் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ இராக்கின் பாக்தாத் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்று கொண்டிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார்.
இது இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது.இப்படியான சூழலில் இனி அணு ஒப்பந்த கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்படியப்போவதில்லை என்ற முடிவை இரான் எடுத்துள்ளது.

ஈரானுடன் பலநாடுகள் இணைந்து செய்துகொண்ட அணு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்தாண்டு அறிவித்தார். புதிய ஒப்பந்தம் ஒன்றைத் தாம் ஏற்படுத்த இருப்பதாகவும் அப்போது கூறி இருந்தார்.

இரான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 2018ஆம் ஆண்டு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து தமது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கத் தொடங்கியது இரான்.இப்படியான சூழலில்தான் 2015ஆம் ஆண்டு ஒப்பந்த கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப்போவதில்லை என நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூறி உள்ளது.

தங்கள் அணுசக்தி கொள்கை அமைதிக்கானது என பலமுறை இரான் கூறி உள்ளது. ஆனால், அந்நாடு அணு ஆயுதம் தயாரிக்கிறது என அமெரிக்க சந்தேகிக்கிறது.

யுரேனிய செறிவூட்டல் திறனை அதிகரிக்கும்பட்சத்தில் இரானால் சில மாதங்களில் அணு ஆயுதம் தயாரிக்க முடியும்.