இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் தொடர்கின்றன – சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள்

இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் தொடர்கின்ற செயல் மிக வேதனை தருகிறது – சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள்

இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் தொடர்கின்ற செயல் மிக வேதனை தருகிறது என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

அவரால் நேற்று (26) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொடர்ந்து வருகின்ற இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் தொடர்கின்ற செயல் மிக வேதனை தருகிறது. குருந்தூர் மலையில் கம்பீரமாக விகாரை ஈரம்காயாது நிற்கிறது. ஆனால் இன்று வெடுக்குநாறி மலை கண்ணீர் வடிக்கிறது. எம் இனத்தின் முதுகெலும்புகள் இல்லா அரசியல் வாதிகளால் இற்றை வரை எதுவுமே செய்ய முடியவில்லை சிவன் கண்ணீர் வடிக்கிறார்.

சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள தெய்வச்சிலைகளை காணும் போது சிதறிய உடலங்கள் போல எங்கள் வணக்க தெய்வங்களை பார்க்கும் போது மனம் மிகவலிக்கிறது. இன்னும் ஏன் இப்ப அமைதியாக இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. எல்லோருக்கும் படி இறைவனை சின்னாபின்னமாக்கி வாழ்நாள் பழிக்கு ஆளாகி உள்ளார்கள் இக்காரியத்தை செய்தவர்கள். இறைவனுக்கு ஆலயம் அமைப்பதென்பது வாழ்நாளில் புண்ணியம் ஆனால் இச்செயலைச் செய்தவர்கள் தமக்கும் தம் சந்ததிக்கும் மாறாத பழியைத் தேடிக் கொண்டுள்ளார்கள்.

உடனடியாக அழிக்கப்பட்ட சிலைகள் நிறுவப்பட வேண்டும். புதிய கோவில் உடனடியாக அமைப்பட வேண்டும். அழித்தவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். வரலாற்றுப் பழிகள் செய்வர்கள் தங்கள் சந்ததிகளை மாறாபழியினை தேடிக்கொண்டுள்ளார்கள் வரலாறுகளை யாராலும் மாற்றி எழுத முடியாது.

அதேபோல இது பௌத்த நாடு என்ற மாயையில் இன்னும் இருப்பார்களேயானால் அது இன்னமும் அழிவிற்கே வழி வகுக்கும் இதனைவிட பெரும் அழிவை நாம் சந்திக்கிப் போகிறோம் என்பதனை உணர வேண்டும். உலகத்தில் வாழும் அத்தனை சைவர்களையும் மன விரக்திக்கு ஆளாக்கிய இச்செயல் வெந்த புண்ணில் வேலைப் பாச்சிய செயலாகவே காணப்படுகிறது.

ஆகவே சமயப் பெரியார்கள் சமய நிறுவனங்கள் மற்றும் குருமார்கள் சார்ந்த அமைப்புகள் விரைந்து இதற்கான நடவடிக்கைகளை செய்ய வேண்டும். அல்லது போனால் இச்செயற்பாடுகள் தொடரும். எல்லாம் கையை மீறிப் போன பிறகு எதனையும் நாம் எண்ணி வருந்துவதால் எந்தப் பயனும் கிடையாது.

அனைத்துக்கும் தீர்வு உடனடியாக காணப்படாது போனால் இன்னமும் நாம் இழக்கவென்று எதுவுமே இருக்காது. ஆக இன்னும் நாம் விழிக்காது இருப்பது எம் சந்ததியை நாமே அழிப்பதற்கு வழி வகுத்தவர்கள் என்ற பழிக்கு ஆளாவோம். அதர்மங்கள் சில காலம் தம் அழிவுகளை தாமாகவே தேடிக்கொள்ளும் அதனைப் போலவே இவர்களும் தங்கள் அழிவுகளை காலம் வரும் போது தாமாக தேடிக்கொள்வார்கள் என்பது நியதி.

எனவே இச்செயல் ஒவ்வொரு மனங்களிலும் மாறாத ரணத்தை உருவாக்கிவிட்டது. இந்த மனநிலை மாறாத வரை மாற்றான் தாய் மனநிலை தொடந்து கொண்டுதான் இருக்கும். எனவே நிரந்தரமான மாற்றங்களும் தீர்வுகளும் இல்லாதவரை இவை தொடரத்தான் போகின்றது. எனவே இச்செயல் மிகவும் கண்டிக்கதக்க விடயமாகும்.