இந்த வருட முடிவுக்குள் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் – ஐ.நா

தற்போது அமைதியாக உள்ள தீவிரவாதிகள் இந்த வருட முடிவுக்குள் மீண்டும் பாரிய தாக்குதலை உலகில் உள்ள நாடுகளில் நடத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச்சபை மேலும் தெரியவருவதாவது:

உலக அமைதிக்கு முஸ்லீம் தீவிரவாதம் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் போரிட்டுவந்த 30,000 இற்கு மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போதும் இயங்குநிலையில் உள்ளனர்.

அவர்களில் பலர் அல்கைடாவில் இணைந்துள்ளனர், சிலர் வேறு அமைப்புக்களில் இணைந்துள்ளதுடன், சிலர் தலைவர்களாகவும் உருவாகலாம்.

இந்த அறிக்கை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

2015 மற்றும் 2016 களில் பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

எனவே ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ளது. சரணடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் புனர்வாழ்வு அதிக பயனைத் தரவில்லை. அவர்கள் மீண்டும் தீவிரவாதத்தை நாடுகின்றனர். அதற்கு வறுமை, நம்பிக்கையின்மை, வேலைவாய்ப்பின்மை, புறக்கணிக்கப்படுகின்றோம் என்ற உணர்வு என்பனவும் சில காரணங்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து 6,000 இற்கு மேற்பட்டவர்கள் ஐ.எஸ் இல் இணைந்திருந்தனர். அவர்களிள் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மிகுதியானவர்கள் தப்பியுள்ளனர்.; 2,000 பேர் ஐரோப்பாவுக்கு திரும்பியுள்ளனர், ஏனையோர் உலகின் பலபகுதிகளுக்குச் செல்லலாம்.

ஐ.எஸ் வசம் தற்போதும் 50 மில்லியன் தொடக்கம் 300 மில்லியன் டொலர்கள் வரையிலான பணம் உள்ளது என அதில் மேலும் தொவிக்கப்பட்டுள்ளது.