இந்து ஆலயத்தில் பௌத்த தேரரின உடல் தகனம் செய்யப்பட்டதற்கு சம்பந்தன் நாடாளுமன்றில் கேள்வி

முல்லைத்தீவு-செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கரையில் பிக்கு ஒருவரின் பூதவுடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

குருகந்த ரஜமகா விகாரையின் தலைமை குரு கடந்த மாதம் மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

அவரின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது, குறித்த தேரரின் உடல் சர்ச்சைக்குரிய வளாகத்தில் தகனம் செய்யப்படக் கூடாது என்றும் அதற்கு மாற்று இடமொன்றில் மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எந்த இடத்தில் தகனம் செய்யக்கூடாதென்று நீதிமன்றம் உத்தரவிட்டதோ அதே இடத்திற்கு கொண்டு சென்று தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு தான் அரசாங்கத்தை வலியுறுத்துவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இதற்கான பதிலை தான் நாளை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.