Tamil News
Home செய்திகள் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக மலையகம் மற்றும் யாழில் போராட்டம்

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக மலையகம் மற்றும் யாழில் போராட்டம்

இந்தியாவில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை ஆதரித்து மலையகத்தில் சிவில் அமைப்புகள்  போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் மற்றும் மொன்லார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், இந்திய விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் பதாதைகளை ஏந்தியிருந்தனர். இதில் இலங்கையில் அதானி நிறுவனம், ஆழமாக காலூன்றுவதை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இந்திய விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் சிறு விவசாயிகளின் உரிமைகளையும் சலுகைகளையும் நசுக்குவதில் இருந்து அவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த தொடர் போராட்டத்தில் இதுவரை 66 விவசாயிகள் உயிரிழந்துள்ளதற்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டதுடன், இந்திய மத்திய அரசுக்கு கண்டனமும் வெளியிடப்பட்டது.

இந்தியாவின் அதானி கம்பனி தற்போது இலங்கையின் கிழக்கு முனையத்தை பெற்றுக்கொள்வது போல ஏனைய துறைகளின் நிலங்களையும் பெறுவதற்கு திரைமறைவில் சதி நடப்பதாகவும் அதனால் எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிலங்களை அழிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

அதே நேரம் இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்திலும் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version