Tamil News
Home செய்திகள் இந்தியாவின் தேசிய பாரம்பரிய சின்னமாக இராமர் பாலம் அறிவிக்கப்படும்?

இந்தியாவின் தேசிய பாரம்பரிய சின்னமாக இராமர் பாலம் அறிவிக்கப்படும்?

இராமர் பாலத்தை நாட்டின் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற சுப்பிரமணியசுவாமியின் கோரிக்கை குறித்து 3 மாதங்களின் பின்னர் பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தியா – இலங்கைக்கு இடையிலான கடற் பகுதியில் இராமர் பாலம் இருப்பதாக கருதப்படுகின்றது. சீதையை மீட்க இராமர் இலங்கைக்கு செல்வதற்கு வசதியாக வானர சேனைகள் இந்தப் பாலத்தைக் கட்டியதாக நம்பப்படுகின்றது.

இந்தப் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல், மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதாக 13 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றில் மத்திய அரசு உறுதியளித்தது.

இதற்கிடையே, இராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இந்திய தொல்லியல்துறைக்கு உத்தரவிடக்கோரி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதற்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசிற்கு கடந்த நவம்பர் 13ஆம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததால், தனது மனுவை அவசர மனுவாக விசாரிக்கும்படி சுப்பிரமணியசுவாமி கேட்டுக் கொண்டார்.

ஏராளமான மனுக்கள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி பாப்டே, 3 மாதங்களுக்கு பின்னர் கூறுங்கள். அப்போது பரிசீலிக்கின்றோம் என்று கூறினார்.

Exit mobile version