ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் படுகொலை;தானே செய்ததாக கூறும் ரஞ்சித்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

34 வருடங்களின் பின்னர் தானே இக்கொலைகளை மேற்கொண்டதாக ஜேர்மனியில் வசித்துவரும் மன்மதன் என்பவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஞ்சித் என்ற இயக்கப்பெயரை கொண்ட மன்மதன் , செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவின் பெயரிலேயே தான் மேற்படி கொலைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளதாகவும் அக்கொலைகளால் தனது முழுவாழ்வும் பாழடைந்துள்ளதாக அவர் மனம்வருந்துவதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றது.

அதேநேரம் இக்கொலைகளுக்கான உத்தரவை வழங்கிய செல்வம் அடைக்கலநாதன் அரச பாதுகாப்புடன் வலம்வரும் அதேநேரத்தில் தன்னால் தனது தாய்நாட்டுக்கு செல்ல முடியாத நிலையுள்ளதாக அவர் மனம் வருந்துவதாக அச்செய்திகள் குறிப்பிடுகின்றது.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாக பாராளுமன்றில் அடைக்கலநாதனும் கொலை செய்யப்பட்ட தர்மலிங்கம் அவர்களின் புத்திரனான சித்தார்த்தனும் இருக்கின்றனர். தனது தந்தையை கொல்ல அடைக்கலநாதனே உத்தரவிட்டார் என்ற தகவல் கிடைத்த பின்னர் சித்தார்த்தன் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார் என்பதை மக்களும் அவதானிகளும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றனர்.