ஆப்கான் மசூதியில் தாக்குதல் – 11 குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தானிலுள்ள மசூதி மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 11 பேர் பலியாகியதுடன், பலர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதல் குறித்து ஆப்கான் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் தாஹர் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 11 குழந்தைகள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பலியானவர்கள் மசூதியில் பயின்ற சிறு மாணவர்களாவர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்“ என்று தெரிவித்துள்ளது.

தாஹர் மாகாணத்தில் ஆப்கான் பாதுகாப்புப் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே சில நாட்களாகவே மோதல் நடபெற்று வருகின்றது. சில நாட்களின் முன்னர் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கான் பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானில் தலிபான்களுடனான போரை முடிவிற்குக் கொண்டு வரும் வகையில், ஆப்கான் அரசு தலிபான்களை அவ்வப்போது விடுவித்து வருவதுடன், பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு வருகின்றது. தலிபான்களின் கோரிக்கைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.