அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக இதுவரை 21 முறைப்பாடுகள்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக இதுவரை 21 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 11 முறைப்பாடுகளும் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 2 முறைப்பாடுகளும் ரிஷாத் பதியுதீனுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் எதிராக கூட்டாக முன்வைக்கப்பட்ட ஒரு முறைப்பாடும் மூவருக்கும் எதிராக கூட்டாக முன்வைக்கப்பட்ட இரு முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இதன் படி முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திசாநாயக்க, உதய கம்மன்பில, பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் உட்பட 11 பேர் முறைப்பாடு செய்துள்ளனர். அஸாத் சாலிக்கு எதிராக பாஹியங்கல ஆனந்த தேரர் உட்பட ஐவரும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ரீ. நகுலேஸ்வரன் உட்பட இருவரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர்களை பதவி விலகுமாறு கோரி ரத்தன தேரர் உண்ணாவிரதம் இருந்ததையயடுத்து இரு ஆளுநர்களும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் அண்மையில் பதவி விலகியிருந்தனர். இந் நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,

முன்னாள் ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்காக கடந்த 4 ஆம் திகதி மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

நேற்று மாலை 4 மணி வரை இதற்காக காலக் கெடு வழங்கப்பட்டிருந்தது.நேற்று பிற்பகல் 3 மணி வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.