அவுஸ்திரேலியா: நோய்வாய்பட்ட மனைவியை சந்திக்க அகதிக்கு அனுமதி மறுப்பு 

மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை சந்திப்பதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய எல்லைப்படை மறுத்து வருவதாக அவுஸ்திரேலிய தடுப்பில் உள்ள சோமாலிய அகதி சயப் அலி சயப் குற்றம் சாட்டியிருக்கிறார். 

கடந்த ஓராண்டில் மூன்று அறுவை சிகிச்சை செய்துள்ள அவரது மனைவியை காண ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என எழுத்துப்பூர்வமாக எவ்வித மறுப்பும் வழங்கப்படவில்லை என சயப் கூறுகிறார். 

அவுஸ்திரேலிய குடிவரவுத்துறையைச் சேர்ந்த ஒரு ஊழியர் தன்னை பார்வையிட்டு, “கொரோனா சூழல் காரணமாக உங்களது மனைவியை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை,” எனக் கூறியதாக சயப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதற்கு முன்பு சந்திப்பதற்கான அனுமதி கோரிய போது நீங்கள் தடுப்பில் உள்ளதால் உங்கள் மனைவி, மகனை சந்திக்க அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறுகிறார். 

தற்போதைய நிலையில், அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் தடுப்பு முகாமில் சயப் சிறைவைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம், நவுரு கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் சயப் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.