அவுஸ்திரேலியா, நியூசிலாந்து இடையில் கொரோனா கட்டுப்பாடற்ற விமானப் பயணத்திற்கு அனுமதி

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையிலான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற விமானப்பயணம்  ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரைகாலமும் நியூசிலாந்து பயணிகள் மாத்திரம் அவுஸ்திரேலியாவுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பயணம்செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவுஸ்திரேலியர்களும் இனி நியூசிலாந்துக்கு பயணம்செய்ய முடியும் என்று   நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern  தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஏப்ரல் 18ம் திகதி  முதல் அவுஸ்திரேலியர்கள் நியூசிலாந்தின் எந்தப் பகுதிக்கும் பயணம்செய்ய முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நியூசிலாந்துக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற பயணம் மேற்கொள்ளும் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென்பது கட்டாயமல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள பிரமதர் Jacinda Ardern, “இருநாடுகளுக்கிடையிலான இப்பயண ஏற்பாடு மகிழ்ச்சியான ஒன்று என்றபோதிலும் இவ்விரு நாடுகளில் ஏதேனும் ஒரு பகுதியில் கொரோனா பரவல் அடையாளம் காணப்பட்டால், மக்கள் தமது பயண ஏற்பாடுகளில் மாற்றம்செய்ய வேண்டியிருக்கும் என்பதுடன் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட நேரிடலாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்”  என்றார்.