அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:  ஒரு காளை உயிரிழப்பு

மதுரையில் களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரர்களாக இருவர் தேர்வாகினர். இந்த போட்டியில் ஒரு காளை உயிரிழந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி, இன்று நடைபெற்றது.

மாடு பிடி வீரர்கள் போட்டிக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர் போட்டியை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 523 காளைகள் பங்கேற்றநிலையில்,420 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டு

போட்டியின் முடிவில் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த விஜய் என்ற மாடுபிடி வீரரும் முத்துபட்டி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்ற மாடுபிடி வீரரும் தலா 26 காளைகளை அடக்கியதற்காக இருவரும் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

சிறந்த காளைக்கான விருதுக்கு மதுரையை சேர்ந்த ஜி.ஆர். கார்த்திக் என்பவருக்கு சொந்தமான காளை தேர்வு செய்யப்பட்டது.