Tamil News
Home செய்திகள் அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பிரேரணை நிறைவேற்றம் – மட்டக்களப்பு மாநகரசபை

அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பிரேரணை நிறைவேற்றம் – மட்டக்களப்பு மாநகரசபை

மட்டக்களப்பு மாநகரசபையின் 20வது பொது அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இன்று இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர உதவி ஆணையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மாநகரசபை உறுப்பினர் தவராஜா அவர்களினால் தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரேரணையும், மாநகரசபைக்குட்பட்ட பதாதைகளில் தமிழ்மொழி முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் அத்துடன் அரசகரும மொழி தவிர்ந்த ஏனைய மொழிகள் அகற்றப்படல் வேண்டும் என்ற பிரேரணைகள் மாநகரசபை உறுப்பினர்களான வே.பூபாளராஜா, கு.காந்தராஜா ஆகியோரால் முன்வைக்கப்பட்டது.

இதன் பிரகாரம் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கில் அரச மொழியாக தமிழ் உபயோகிக்கப்பட வேண்டும் என்கின்ற விடயம் அரச அதிகாரிகளால் பின்பற்றப்படுவதில்லை என தவராஜா குறிப்பிட்டார் இருப்பினும் மாநகரசபை என்கின்ற ரீதியில் எம்மால் பிரேரணை நிறைவேற்றப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் தமிழ்மொழி அமுலாக்கலை நடைமுறைப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

அதே அடிப்படையில் வியாபார நிலையங்களில் பெயர்ப் பதாதைகளில் தமிழ் மொழி முன்னுரிமைப்படுத்தப்படாமலிருப்பது தொடர்பில் பூபாளராஜா தெரிவிக்கையில் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு வியாபாரப் பத்திர புனரமைப்பின் போது தமிழ்மொழி முன்னுரிமைப்படுத்தப்படுவது தொடர்பில் உரிய நடைமுறைகளைத் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அடுத்து அரச கரும மொழிகள் இல்லாத மொழிகள் பிரயோகிப்பது தொடர்பில் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச எல்லையில் காணப்படும் வரவேற்பு தோரணத்தில் உள்ள அராபிய எழுத்துக்கள் அகற்றப்படல் வேண்டும் என காந்தராஜா அவர்கள் தெரிவித்தார்.

இவை தொடர்பில் மாநகர முதல்வர் கருத்துத் தெரிவிக்கையில் வியாபார நிலையங்களின் பதாதைகளில் தமிழ்மொழி பிரதானப்படுத்துவது தொடர்பில் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவதுடன், அரச அலுவலகங்களின் பிரதானிகளுக்கும் நிறைவேற்றப்படுகின்ற பிரேரணை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து காத்தான்குடி மட்டக்களப்பு எல்லையில் அமைக்கப்பட்ட வரவேற்புத் தோரணத்தில் உள்ள அரபு மொழி அகற்றப்படுவது தொடர்பில் எமது அறிக்கையினை முன்வைப்பபதுடன் பிரதமரின் சுற்றுநிரூபத்தை அடிப்படையாகக் கொண்டு காத்தான்குடி நகரசபைக்கு அறிக்கை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதியாகக் கடந்த ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக மாநகர சபையினால் அமைக்கப்படுகின்ற நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் காரசாரமான விவாதங்களும் இதன்போது இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version