அரசியல் லாபத்திற்காக புலிகளின் பெயரை கொச்சைப்படுத்தாதீர்கள்  – திமுக மீது சீமான் கண்டனம்

விடுதலைப் புலிகளால் சோனியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, அண்மையில் பாராளுமன்றத்தில் பேசிய திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு குறிப்பிட்டிருந்தார். இதனால் சோனியா காந்திக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்தப் பேச்சைக் கண்டித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது” என பாராளுமன்றத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் அம்மையார் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரிய பாதுகாப்பு இரத்துச் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில், டி.ஆர்.பாலு இவ்வாறு பேசியிருக்கின்றார்.

டி.ஆர்.பாலு சோனியா காந்திக்கு உயரிய பாதுகாப்பு வழங்கக் கோருவது அவர்களது உரிமை, விருப்பம். ஆனால், அதற்கு விடுதலைப் புலிகள் பெயரைப் பயன்படுத்துவதும், அவர்களால் சோனியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகக் குற்றஞ்சாட்டுவதும் அபாண்டமானது. அடிப்படையில்லாதது.

விடுதலைப் புலிகளை அழித்து முடித்து விட்டதாக இந்திய அரசே கூறிவரும் நிலையில், அதற்கு விதிக்கப்பட்ட தடையே தேவையற்றது எனப் பல ஆண்டுகளாக நாம் கூறிவருகின்றோம். அத்தடையின் மூலம் ஒட்டு மொத்த ஈழத் தமிழ்ச் சொந்தங்களையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது அவர்களுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்துகின்றது எனக் கூறித்தான் தடையை விலக்கக் கோருகின்றோம். இந்நிலையில் டி.ஆர்.பாலு பேசியிருப்பது எதிராளியின் நச்சுப் பரப்புரைக்கு வலுச் சேர்ப்பதாக இருக்கின்றது.

ஈழ இனப்படுகொலையில் நேரடியாகத் தொடர்புடைய கோத்தபயா ராஜபக்ஸ இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அரசியல் சூழலில் ஈழத் தமிழர்கள் மிகப் பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கின்றார்கள். இந்த நேரத்தில் திமுகவின் பாராளுமன்றக் குழுத் தலைவர் புலிகளால் ஆபத்து என்று பேசுவத ஏற்கனவே பல்லாண்டுகள் நெருக்கடியில் இருக்கும் ஈழத் தமிழர்கள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நசுக்கப்படும் சூழலை உருவாகப் போகிறது. கோத்தபயா ராஜபக்ஸ வெற்றிக்குப் பின்னர் ஈழத் தமழர்கள் மீது அக்கறை இருப்பதைப் போன்று அறிக்கை வெளியிட்ட திமுகவின் தலைமை டி.ஆர். பாலுவின் இந்தப் பேச்சை ஏற்றுக் கொள்கின்றதா?  ஆமோதிக்கின்றதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஈழப் படுகொலைக்கு ஒரு பன்னாட்டுப் போர்க் குற்ற விசாரணையையும், ஒரு பொது வாக்கெடுப்பையும் கேட்டு பத்து ஆண்டுகள் நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில், அதற்குரிய எவ்வித முன்னெடுப்பையும் செய்ய முன்வராத திமுக, தனது கூட்டணித் தலைவரை மனம் குளிர வைக்க அவரது பாதுகாப்பிற்கு புலிகளின் பெரைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் கீழ்த்தரமான, சந்தர்ப்பவாத அரசியல். திராவிடத்தின் இறுதி நம்பிக்கையெனக்கூறி, குறைந்தபட்ச திராவிடம் இருப்பதாகக் கூறி திமுக வை ஆதரிக்கின்ற திராவிட இயக்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான திமுகவின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்களா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

சிங்கள இனவாத கொடுமைகளுக்கு எதிராக நின்று தமிழினத்தின் காவலரணாக இருந்த விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்துக்களைத் தெரிவித்த திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடனடியாகத் தனது கருத்துக்களைத் திரும்பப் பெற்று, அதற்கு மன்னிப்புக் கோர வேண்டும். இல்லாவிடில், தேர்தல் களத்தில் தக்க பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கின்றேன். இவ்வாறு  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.