அரசியல்வாதிகள் சிலர் மணல் கொள்ளையர்களுக்கு உதவி – சாணக்கியன் காட்டம்

எமது மக்களின் வயிற்றில் அடித்து அபிவிருத்தி செய்யும் அக்கறையற்ற அரசியல்வாதிகள் சிலர் மணல் கொள்ளையர்களுக்கு உதவி செய்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம்சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர், கித்துள் பிரதேச சபை உறுப்பினர்களான வர்ணன், சிவானந்தன் மற்றும் ஊர்மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது குறித்த பகுதி மக்களினால் மணல் பாரஊர்திகள் தமது பிரதேச  வீதி ஊடாக பயணிப்பதை நிறுத்துமாறு கோரி மனு ஒன்று கையளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் மணல் கொள்ளையர்களுக்கு சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருகின்றனர். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் மறந்து செயற்படுகின்றனர்” என்றார்.

மேலும் மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் பயணத்தடை காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட விரோத மண் அகழ்வுகள் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சுமத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.