Tamil News
Home செய்திகள் அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பொதுமக்களின் தேவையினை உரியநேரத்திற்குள்நிறைவேற்றிக்கொடுக்கவேண்டும். அதற்கு தேவையான அர்ப்பணிப்பினை உத்தியோகத்தர்கள் வழங்கவேண்டும் என புதிதாக கடமையேற்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

கடந்த 30வருடகால யுத்ததினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை தன்னால் முடிந்தளவு முன்னெடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த புதிய மாவட்ட அரசாங்க அதிபருக்கு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள்,மேலதிக அரசாங்க அதிபர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

புதிய அரசாங்க அதிபருக்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் உட்பட பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள் வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டனர்.

மட்டக்களப்பினை சேர்ந்த திருமதி கலாமதி பத்மராஜா 29வருடங்கள் நிர்வாக சேவையில் அனுபவத்தினைக்கொண்டுள்ளதுடன் முதல் நியமனத்தினை கல்முனை உதவி பிரதேச செயலாளராக பெற்றுக்கொண்டதுடன் அதன் பின்னர் வாழைச்சேனை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகவும் கிழக்கு மாகாணசபையில் பிரதி செயலாளராகவும் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருந்த போதும் குறித்த அரசாங்க அதிபர் நியமனமானது முழுமையாக அரசியல் நோக்கம் கொண்டதென மட்டக்களப்பில் உள்ள அநேகமான மக்கள் கருதுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version